கார் சிலிண்டர் வெடிப்பு.. கைது செய்யப்பட்ட 2 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ விசாரணை
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 12-வது நபரான இத்ரீஸ் மற்றும் 13-வது நபர் அசாருதீன் ஆகியோரை கோவை அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பப்பட்டது.

சதி திட்டத்தை செயல்படுத்த முயன்றபோது போலீசார் வாகன தணிக்கையால் என்ன செய்வது என தெரியாமல் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து முபின் உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே கைதான 6 பேர் உள்பட கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 11 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
அதேபோல், கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த முகமது இட்ரீஸ் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் 13-வது குற்றவாளியாக அசாருதீன் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ கைது செய்தது. இந்த நிலையில், கைதான இருவரையும் கோவை அழைத்து வந்து இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications