கோவையில் பிரபல பிரியாணி கடை சிக்கன் குழம்பில் பல்லி.. விசாரித்ததால் தெரிய வந்த பெரிய உண்மை
கோவை: பிரியாணி கடையில் வேண்டுமென்றே பூச்சி இருப்பதாக குற்றம்சாட்டி பணம் பறிப்பது ஆங்காங்கே நடக்கிறது. இதேபோல் பிரியாணி கடைகளில், இலவசமாக சாப்பிட வேண்டும் என்பதற்காக பூச்சி இருக்கிறது, பல்லி இருக்கிறது என்று பொய்யாக குற்றம்சாட்டி வீடியோ போடுபவர்களும் உள்ளார்கள்.. அப்படி வீடியோ போட்டு சிறைக்கு போனவர்களும் உள்ளார்கள். அந்த வகையில் கோவை ஆர்எஸ் புரத்தில் பிரியாணி கடையில் சிக்கன் குழம்பில் வேண்டுமென்றே ரப்பர் பல்லியை போட்டு வீடியோ எடுத்து வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ஆர்எஸ் புரத்தில் கோவை பிரியாணி என்ற உணவகத்தில் சிக்கன் குழம்பில் வேண்டுமென்றே லப்பர் பல்லியை போட்டு வதந்தி பரப்பிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள கோவை பிரியாணி கடைக்கு கடந்த மே மாதம் 27ம் தேதி சிலர் சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் பிரியாணிக்கு கொடுக்கப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி இருப்பதாக கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி இருந்தது.

நீ சாப்பிடுவியா இதனை என்று கேட்டதுடன், எத்தனை பேருக்கு பரிமாறினாய் என்று கேட்டு வீடியா எடுத்து வெளியிட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து கோவை ஆர்எஸ் புரத்தில் இயங்கி வந்த அந்த உணவகத்தை தற்காலிகமாக மூட நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை பிரியாணி கடை உரிமையாளர், தங்கள் உணவகத்தில், வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி இருந்ததாக கூறப்பட்ட புகாரில் சதித்திட்டம் உள்ளதாக கூறி கடந்த ஆறு நாள் முன்பு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். திட்டமிட்டே பல்லியை உணவில் கலந்துள்ளதாகவும், அதற்கான சிசிடிவி ஆதாரத்தையும் அளித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அது உண்மையான பல்லி இல்லை என்பதும் ரப்பல் பல்லி என்பதும் தெரியவந்துள்ளது. அந்த குறிப்பிட்ட நபர்கள் கடைக்கு வருவதற்கு முன்னதாகவே பத்திரிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த நடராஜன் உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையிலும் இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் பூச்சியை தானே எடுத்துபோட்டு, பூச்சி இருப்பதாக வதந்தி பரப்பி சிக்கினார். அவர் பூச்சியை எடுத்து போடும் வீடியா சிசிடிவி காட்சியில் இருந்தது. இதை கண்டுபிடித்த ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்தார். அதன்பேரில் அவர் மீது அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பொதுவாகவே உணவகங்களின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சிலர் உணவகத்தில் ஓசியில் சாப்பிடுவதற்காகவும் இப்படி வதந்திகளை பரப்புவதாக புகார்கள் உள்ளது. உணவகத்தில் பல்லி , பூச்சி என்று வீடியோ பரவினால் அந்த உணவகத்திற்கு மக்கள் மறந்தும் போகமாட்டார்கள் என்பதால், அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் சூழல்கள் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் இருந்ததால் எளிதாக உண்மையை அறிய முடிந்தது.












Click it and Unblock the Notifications