போலீஸ் வேன் குறுக்கே வந்த கார்.. சவுக்கு சங்கர் சென்ற வாகன விபத்தின் சிசிடிவி காட்சி!
கோவை: காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும் கஞ்சா வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்ட பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கிய பரிதவிக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக இந்த காட்சிகளை போலீசார் டெலிட் செய்திருந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி பின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சங்கர், சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். மேலும் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு இணையதளங்களுக்கும் யூட்யூப் சேனல்களுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். அப்படி ஒரு சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி தான் தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து கோவை அழைத்து சென்றனர்.
காவல்துறை வாகனத்தில் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்த நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கோவை செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்டு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
தொடர்ந்து கோவையில் ரகசிய இடத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் போலீசார் சில மணி நேரங்கள் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தேனியில் சவுக்கு சங்கருடன் இருந்த அவரது ஓட்டுனர் ராம் பிரசாத் மற்றும் நண்பர் ராஜரத்தினத்தை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து சவுக்கு சங்கரின் காரில் சோதனை நடத்திய போலீசார் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாகவும் பழனி செட்டிபட்டி காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர்
இதனையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கஞ்சாவைத் வைத்திருந்தது மற்றும் சைபர் கிரைம் ஆகிய இரு குற்றங்களை சவுக்கு சங்கர் செய்திருக்கும் நிலையில் இரு பிரிவு போலீஸ் சங்கரை விசாரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தாராபுரம் அருகே சவுக்கு சங்கர் சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. நெடுஞ்சாலையில் பிரிவு ஒன்றில் ஒரு கார் சாலையை கடக்க முயல்வதும் அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளாவதும் அதில் பதிவாகி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த சிசிடிவி காட்சிகளை குறிப்பிட்ட அந்த சர்வரில் இருந்து போலீசார் டெலிட் செய்து விட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications