வாக்கிங் போன பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிப்பு..சிசிடிவி பார்த்து கொத்தாக அள்ளிய கோவை போலீஸ்
கோவை: உடல் ஆரோக்கியத்திற்காக வாக்கிங் போன பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகி உள்ளது. கோவையில் காலை நேரத்தில் பெண் ஒருவர் நடந்து சென்ற போது காரில் வந்த இரண்டு வழிப்பறி கொள்ளையர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து கீழே தள்ளியுள்ளனர். பதைபதைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த நகை பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெருவில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருந்து நகைகளை பறித்து செல்வது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. முன்பெல்லாம் இரு சக்கர வாகனங்களில் வந்து நகைகளை பறித்து சென்றனர். இப்போது கார்களில் வந்து நகையை பறித்து செல்கின்றனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகை திருடர்களும் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

கோவை ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் வசித்து வருபவர் கௌசல்யா. இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். சாலை ஓரமாக அவர் நடந்து சென்ற போது வெள்ளை நிற காரில் வந்த நபர்கள் கௌசல்யாவின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
அதிர்ச்சியடைந்த கௌசல்யா தனது கழுத்தில் இருந்த சங்கிலியை இருக்கமாக பற்றிக்கொண்டார். இதனால் காரின் அருகிலேயே கீழே விழுந்தார் கௌசல்யா. காரின் சக்கரத்திற்கு அருகே தள்ளி விழுந்த காரணத்தால் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினார் கௌசல்யா. இந்த சிசிடிவி காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சியினர் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இன்று காலையில் இருவரை கைது செய்தனர். அதில் ஒருவர் கால் டாக்சி டிரைவர் மற்றொருவர் உணவு டெலிவரி செய்யும் தொழில் செய்து வருகிறார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் 25, திருவண்ணாமலையை சேர்ந்த அபிஷேக், 29 ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செயின் பறிப்பிற்கு பயன்படுத்தபட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

செயின் பறிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் துணை ஆணையர்கள் சண்முகம், சந்தீஸ், அபிஷேக் குமார் மீது ஏற்கனவே இது போன்ற நகைப்பறிப்பு வழக்குகள் உள்ளதாக கூறினர். அபிஷேக் குமார் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தவர்.
சக்திவேல் மீது எந்த வழக்கும் கிடையாது. இந்த காரின் உரிமையாளர் அவர்தான். பீளமேடு பகுதியில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 7 ஆண்டுகளாக நண்பர்களாக வசித்து வருகின்றனர். கால் டாக்ஸி ஓட்டும் சக்திவேலும் அபிஷேக் குமாரும் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நகை பறிப்பு சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு 3 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், துரிதமாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்ணிடம் திருட வேண்டும் என திட்டமிட்டு வரவில்லை. சக்திவேலுக்கு பணம் தேவை இருந்ததாக கூறியதால், அபிஷேக் கொடுத்த ஐடியாவின் படி பெண்களிடம் நகையை பறிக்க முடிவு செய்தனர். சாலையில் செல்லும் யாரிடமாவது செயினை பறிக்க திட்டமிட்டு சென்ற போது தற்செயலாக நடந்த சம்பவம் இது என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கூறியுள்ளனர்.
இந்த வாகனத்திற்கு நம்பர் பிளேட் இல்லை, இருப்பினும் காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அடிப்படையில் தனிப்படைகள் பல இடங்களில் விசாரித்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். பீளமேடு விமான நிலையம் பின்புறம் இருந்து செயின் பறிக்க பயன்படுத்தபட்ட வாகனத்தை கண்டு பிடித்து இருவரை கைது செய்தாக தெரிவித்தனர். காவலர்களின் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்த வழக்கில் ஈடுபட்டவர்களை விரைவாக பிடிக்க முடிந்தது.

கடந்த 2 மாதத்தில் காவல்துறையின் ரோந்து காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிக்கும் சம்பவம் வெகுவாக குறைந்துள்ளது. பொதுமக்கள் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க பெரிதும் உதவியாக இருந்தது எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Chain snatching in Coimbatore GV residency, snatchers in car ! pic.twitter.com/vNEug5fh4d
— Prashanth Rangaswamy (@itisprashanth) May 15, 2023












Click it and Unblock the Notifications