சமயம் கடந்து கொண்டாடப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ்! கோவையில் நெகிழ்ச்சி! வாழ்த்து கூறி மகிழ்ந்த மக்கள்
கோயம்புத்தூர்: உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், உக்ரைன்-ரஷ்யா போர், உலக பொருளாதாரம், கோவிட் தொற்று, சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள், சாதிய, மத, இன மோதல்கள் என இந்த ஓராண்டில் ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்நிலையில், புத்தாண்டுக்கு முன்னோட்டமாக இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

"புறாக்களை போல கபடமில்லாமல் இருங்கள்" என்கிற யேசுவின் பொன்மொழியை பிரதிபலிக்கும் பொருட்டு, ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு இன்று அன்பை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கொருவர், இனிப்பு, புத்தாடை, அன்பு மொழி பரமாரிக்கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு 12 மணியளவில் தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தமிழ்நாட்டில், வேளாங்கண்ணி, தூத்துக்குடி, சென்னை - சாந்தோம், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, கொடைக்கானல், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு திருப்பலி நடைபெற்றது. புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் தொடக்கமாக கிறிஸ்துமஸ் இருப்பதால் ஏராளமான மக்கள் இதனை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
சர்வதேச அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கோயம்பத்தூரில் காந்திநகர் பகுதியில் சமத்துவ கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்து மத தலைவர், கிறிஸ்தவ பாதிரியார், மசூதியின் தலைமை இமாம் ஆகியோர் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இது குறித்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில்,
"நாங்கள் 15 ஆண்டுகளாக இந்த சமத்துவ கிறிஸ்துமஸை கொண்டாடி வருகிறோம். கிறிஸ்துமஸ் மட்டுமல்ல, பொங்கல், தீபாவளியை கூட சமத்துவமாக கொண்டாடி வருகிறோம். மக்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்" என்று கூறியுள்ளனர். இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications