Chinnathambi: சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவது கொலை செய்வதற்கு சமம்.. வன உயிரின ஆர்வலர்கள்
கோவை: சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவது கொலை செய்வதற்கு சமம் என கூறியுள்ள வன உயிரின ஆர்வலர்கள், கனிம வனக் கொள்ளைக்கு எதிராக இருந்த யானைகளை இடமாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்த விநாயகன் மற்றும் சின்னத்தம்பி என பெயரிடப்பட்ட இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் பிடித்து முதுமலை மற்றும் வரகழியாறு வனப்பகுதிகளில் விட்டுள்ளனர்.
இதில் சின்னத்தம்பி யானை தற்போது 100 கி.மீட்டர்களுக்கும் மேலாக பயணித்து, திண்டுக்கல் மாவட்டத்தை நெருங்கி வருகிறது. உடுமலைப்பேட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் இந்த யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கும்கியாக மாற்றுவது
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மதியம் அவசர வழக்காக விசாரிக்கப்படவுள்ளது. இதனிடையே சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவதை கைவிடக் கோரியும், மீண்டும் தடாகம் பகுதியில் அதனை கொண்டு வந்து விடவும் கோரி வன உயிரின ஆர்வலர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டனர்.

கொலைக்கு சமம்
அப்போது பேசிய வழக்கறிஞர் பன்னீர்செல்வம், தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக மண் எடுக்கப்படும் கனிம வள கொள்ளையை தடுத்து வந்த யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சின்னத்தம்பி போன்ற இளவயது ஆண் யானையை கும்கியாக மாற்றுவது அதனை கொலை செய்வதற்கு சமம் எனவும் தெரிவித்தார்.

சாதுவான யானை
வன உயிரின ஆர்வலரான சந்திரசேகர் கூறும் போது, கடந்த ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த போதும், தீப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை வைத்து விரட்டியபோது சின்னத்தம்பி யானை யாரையும் தாக்கவில்லை என்பதன் மூலம் அது சாதுவான யானையாக விளங்குகிறது.

வாழ்விடம்
எனவே குடும்ப யானைகளை இழந்து வாடும் யானையை மீண்டும் அதனை அதன் வாழ்விடத்திலேயே வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி மனு அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மனு அளிப்பதற்காக வந்த வன உயிரின ஆர்வலர்கள் கைகளில் சின்னத்தம்பி யானையின் புகைப்படம் பொறித்த பேனர்களை ஏந்தியபடி யானையை காக்க கோரி முழக்கங்களையும் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications