இது உங்க பதவிக்கே அழகா..? மேட்டுப்பாளையம் மேட்டர்.. ட்விட்டரில் ஈபிஎஸுக்கு செந்தில் பாலாஜி பதில்
கோவை: மேட்டுப்பாளையம் மணி நகர் அரசுப்பள்ளியில் அமைய உள்ள அறிவுசார் மையத்தினை இடமாற்றம் செய்ய கோரி அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் நேற்று நகர்மன்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் மேட்டுப்பாளையம் மணி நகர் அரசுப் பள்ளியில் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு திட்டத்தின் கீழ் அறிவுசார் மையம் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்
இந்த நிலையில் மணி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்போது 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், இனிவரும் காலங்களில் இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாலும் அங்கு அமைய உள்ள அறிவுசார் மையத்தை இடமாற்றம் செய்ய கோரி அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் நேற்று மாலை 5 மணி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

பேச்சுவார்த்தை
அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வருவாய் கோட்டாட்சியர் பூமா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அரசு திட்டத்தை நிறுத்த முடியாது என்றும், தற்போது நடைபெற்று வரும் பணிகளை தற்காலிகமாக வேண்டுமானாலும் நிறுத்தி, சில நாட்களில் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் பூமா உறுதியளித்தார்.

கைவிடப்பட்ட போராட்டம்
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி ட்வீட்
அதில், "மேட்டுப்பாளையம் மணிநகரில் அமைந்துள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அறிவுசார் நூலகம் கொண்டு வருவதன் மூலம் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தேவையான குறைந்தபட்ச நிலம் குறையக்கூடிய அபாயத்தால், அப்பகுதி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மேல்நிலை கல்விக்கு மூடுவிழா நடத்த, திட்டமிட்டுள்ள மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 29.07.2022 மாலை 5 மணி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் கழக நகர மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையினை இந்த விடியா அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

செந்தில்பாலாஜி பதில்
எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில், "மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் 24 பேரின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் சுயநல நோக்குடன் நடத்தப்படும் சலசலப்பை என்னவென்றே விசாரிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் பதிவிடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகன்று." என பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications