கோவையில் இனி வேலைவாய்ப்பு கொட்ட போகுது.. அட்டகாசமாக வருகிறது எல்காட்! வாவ் சூப்பர்
கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கியமான நகரம் என்றால் அது கோவை தான். இதனால் கோவையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எல்காட் ஐடி பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. இது கோவையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் கோவை செல்கிறார்.

அதாவது நவ. 5 மற்றும் 6ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் கோவை செல்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவையில் கட்டப்பட்டுள்ள எல்காட் ஐடி பூங்காவைத் திறந்து வைக்கிறார்.
கோவை நகரம்: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கியமான நகரமாகக் கோவை இருக்கிறது. கோவை நகரைப் பொறுத்தவரை ஏதோ ஒரு துறையில் மட்டும் வளர்ந்த நகரம் இல்லை.. ஐடி, விவசாயம், உற்பத்தி என்று எல்லா துறைகளிலும் பிரதான இடத்தில் கோவை இருக்கிறது. இதன் காரணமாகவே கோவையில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாகச் சமீப காலமாக ஐடி நிறுவனங்கள் அதிகளவில் கோவையில் முதலீடு செய்து வருகின்றன. சென்னையில் ஐடி என்பது வளர்ந்துவிட்டது. இப்போது ஆபீஸ் போடுவது தொடங்கி சென்னையில் செலவு அதிகம். இதன் காரணமாக முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் சென்னையைத் தாண்டி பிற மாவட்டங்களில் செல்ல ஆர்வம் காட்டி வருகிறது. அதில் பிரதான இடத்தில் கோவை இருக்கிறது.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை: கோவையில் ஐடி நிறுவனங்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த எல்காட் ஐடி பூங்கா கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இந்த எல்காட் ஐடி பூங்கா குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஐடி பூங்கா: மொத்தம் 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த பகுதியில் ஐடி நிறுவனங்களுக்கு மட்டும் 1.56 லட்சம் சதுர அடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கோவையில் உள்ள விளாங்குறிச்சியில் 2.86 ஏக்கரில் ₹114.16 கோடி முதலீட்டில் இந்த எல்காட் பூங்கா கட்டப்பட்டுள்ளது. ஆறு மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு என்று தனியாக இடத்தை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையின் அடுத்த கட்ட ஐடி துறை வளர்ச்சிக்கு இந்த பூங்கா மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி கோவையின் குறிச்சி என்ற பகுதியில் தொழிலாளர்கள் தங்கக் கட்டப்பட்டு வரும் விடுதியையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட உள்ளார். மேலும், கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் உடனும் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "முதல்வரின் திட்டம் முழுமையாக இன்னும் இறுதியாகவில்லை. அதேபோல எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வரவில்லை. ஆனாலும், முதல்வர் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் நகை செய்வோருடன் கலந்துரையாடுவார் என்றே நினைக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications