அவங்க கேட்டது மசாலா ரோஸ்ட்.. ஆனா கிடைச்சது கரப்பான்பூச்சி தோசை.. கோவையில் பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி
கோவை: கோவையில் சாய்பாலா காலனி அருகே உள்ள ஒரு பிரபல சைவ ஹோட்டலில் பரிமாறப்பட்ட மசாலா தோசையில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளது சாய்பாபா காலனி. இங்கு பிரபல உயர்தர சைவ ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் பலர் உணவு வாங்கி செல்வர்.

தங்கள் வீட்டு விசேஷம், பார்ட்டிகள், அலுவலக பார்ட்டிகளுக்கும் உணவுகளை இங்கிருந்து வாங்கி செல்வராம். அந்த அளவுக்கு அந்த ஹோட்டல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது, விலை அதிகமாக இருந்தாலும் சுவை நன்றாக இருக்கிறதே என்பதால் பலர் இந்த ஹோட்டலில் உணவு சாப்பிடுகிறார்கள்.
காலையில் வாக்கிங் செல்வோர் இந்த ஹோட்டலில் டீ, காபி குடித்துவிட்டு வீடு திரும்புவர். சிலர் இந்த ஹோட்டலிலேயே டிபனையும் முடித்துவிட்டு செல்வார்கள். அந்த வகையில் சாய்பாபா காலனியில் எந்த ஹோட்டலில் உணவு தரமாக இருக்கும் என கேட்டால் பலர் இந்த ஹோட்டலின் பெயரைத்தான் சொல்வார்களாம்.
அப்படிப்பட்ட இந்த ஹோட்டலில் ஒரு செயலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஹோட்டலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வந்தனர். அப்போது அங்கு வந்த தம்பதி தங்களுக்கு மசாலா தோசை வேண்டும் என ஆர்டர் கொடுத்தனர். பசியில் காத்திருந்த அவர்கள் தங்கள் டேபிளை நோக்கி இரு மசாலா தோசை வருவதை கண்டு சாப்பிட தயாராகினர்.
டேபிளில் மசாலா தோசை வைத்தவுடன் அந்த தோசையை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டனர். அப்போது தம்பதியில் ஒருவரது தோசையில் முழுசாக கரப்பான்பூச்சி இருந்ததை கண்டு சப்தமிட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே ஹோட்டல் நிர்வாகிகள் வந்து என்ன என கேட்ட போது கரப்பான்பூச்சியை காண்பித்தனர்.
மேலும் காசு கொடுத்துதானே சாப்பிடுகிறோம், தரமாக கொடுக்க மாட்டீர்களா, ஹோட்டலா நடத்துறீங்க என தம்பதி, நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த சம்பவம் வீடியோவாக சமூகவலைதளங்களில் பரவியது. இது குறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் அந்த மசாலாவின் மாதிரியை சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் கூறுகையில், மசாலாவில் கரப்பான்பூச்சி இருந்திருந்தால் அது இப்படி முழுசாக இருக்காது, குழைந்துவிட்டிருக்கும். அல்லது நசுங்கியிருக்கும். எனவே வெளியிலிருந்து பறந்து வந்திருக்கும் என விளக்கம் கொடுத்தனர். எனினும் இதை கேட்காத அதிகாரிகள் ஹோட்டல் கிச்சனை பூச்சி இல்லாத அளவுக்கு கிளீன் செய்யுமாறு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications