என்னோட ஆட்டோவை கொண்டு வந்தீட்டீங்களா.. உங்கள விட மாட்டேன்.. போலீஸ் ஸ்டேசனில் நடந்த விபரீதம்
கோவை: கோவையில் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த டிரைவர், திடீரென போலீஸ் ஸ்டேசன் வாசலில் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துணை கமிஷனர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை நடத்தியதுடன், போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்கும் அளவுக்கு போலீசார், அலட்சியத்துடன் நடந்து கொண்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
கோவை பிள்ளையார்புரத்தில் ஆட்டோ ஓட்டுபவர் சவுகத் அலி (33).. இவருக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் சதீஷ்குமாருக்கும் நேற்று முன்தினம் சண்டை நடந்திருக்கிறது.

போத்தனூர் போலீஸ்
இந்த தகராறு தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அத்துடன் விசாரணையின் பேரில் சவுகத் அலியின் ஆட்டோவை பறிமுதல் செய்தார்கள். அதை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தினார்கள்.

விபரீத முடிவு
இதனால் சோகத்தில் இருந்த சவுகத் அலி, நேற்று முன்தினம் இரவு திடீரென போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றார். ஆட்டோவை பறிமுதல் செய்ததால் கோபத்தில் இருந்த சவுகத் அலி, என்னோட ஆட்டோவை கொண்டு வந்தீட்டீங்களா, உங்கள விட மாட்டேன் என சத்தமிட்டபடி பெட்ரோலை தலையில் ஊற்றி தீப்பற்ற வைத்து கொண்டு எரியும் நெருப்புடன் போத்தனூர் ரோட்டில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்திருக்கிறார்.

தனியார் மருத்துவமனை
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துணை கமிஷனர் ஸ்டாலின் அங்கு வந்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவை பார்வையிட்டார்.

வாக்குமூலம்
போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்குள் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்கும் வகையில் போலீசார் அலட்சியமாக இருந்தார்களா? என்று விசாரித்தார். தீக்காயமடைந்த சவுகத் அலியிடம் வாக்குமூலம் வாங்கி உள்ளனர். போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications