கோவையின் 50 வருட அடையாளம்.. அடியோடு மாறுது.. உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் நடக்க போகும் மாற்றம்
கோவை: கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் உள்ள பழைய மேம்பாலம் 50 ஆண்டுகளை கடந்தது. இந்த மேம்பாலம் குட்ஷெட் ரோடு, மில்ரோடு, புரூக் பாண்ட் ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. இது கோவையின் முக்கியமான மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்தை கடந்து தான் கோவை மக்கள் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு போகவே முடியும். இங்கு நெரிசல் அதிகமாக இருக்கும். சிறியதாக இருக்கும். இந்நிலையில் பழைய மேம்பால ரவுண்டானாவை ரூ.5 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் கடந்த 15 வருடங்களில் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையை போல் கோவையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள்கட்டப்பட்டுள்ளன. பல்வேறு சாலைகள் அகலமான சாலைகளாக மாறிவிட்டன. கோவை மாநகரம் பல்வேறு நகரங்களை நேரடியாக இணைப்பதால் ஏரளமான சாலைகள் உள்ளன.

50 வருட அடையாளம்
அந்த சாலைகளில் எல்லாம் நல்ல வளர்ச்சி ஏற்பட்டதால், கோவை மாநகரில் கடந்த 20 வருடங்களில் வாகன பெருக்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துவிட்டது. கோவையில் பல்வேறு விஷயங்கள் மாறினாலும் 50 வருடங்களாக அப்படியே இருக்கும் ஒரு இடம் என்றால் கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பழைய மேம்பாலம் தான். இது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. குட்ஷெட் ரோடு, மில்ரோடு, புரூக் பாண்ட் ரோடு ஆகியவற்றை இந்த மேம்பாலம் இணைக்கிறது. இந்த மேம்பாலம் கோவையின் அடையாளங்களில் ஒன்று. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சுரங்கப்பாதைகள்
மழைக்காலங்களில் மேம்பாலத்தின் சுரங்க வழித்தடங்களில் மழைநீர் தேங்கிவிடும். அப்போது வாகனங்கள் செல்ல முடியாது. அப்போது அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்படுவது வழக்கம். அப்போது வாகன நெரிசல் பாலத்தில் கடுமையாக ஏற்படும். பீக் அவர்ஸில் எப்போதுமே நெரிசலுடன் இருக்கும்.
நெரிசலில் திணறியது
சில மாதங்களுக்கு முன்பு சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி அந்த மேம்பாலத்தில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கோவை மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். கனரக வாகனங்கள் அந்த மேம்பாலத்தில் திரும்பி செல்வது கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினரே மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
5 கோடியில் செலவு
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், அவினாசி சாலை பழைய மேம்பாலத்தின் ரவுண்டானாவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக மேம்பாலம் அருகில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.20 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது தொழில்நுட்ப ஒப்புதலுக்காக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம். இதில் ரவுண்டானா விரிவாக்கம் மட்டும் ரூ.5 கோடியில் செய்யப்பட உள்ளது என்றார்கள்.
உப்பிலிபாளையம் மேம்பாலம் 3வது பாதை
உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் ரவுண்டானா இரு வழித்தடமாக இருக்கும் நிலையில். ரவுண்டானாவின் பக்கவாட்டு பகுதியில் 3-வதாக மேலும் ஒரு பாதை அமைத்து விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ரவுண்டானாவின் மையப்பகுதியில் உள்ள இடைவெளி குறைக்க வாய்ப்பு இல்லை என்றும். வாகனங்கள் வெளியேறும் நுழைவு வாயில், நெருக்கடியின்றி வாகனங்கள் திரும்பிச்செல்லும் வகையில் சீரமைக்கப்பட உள்ளது என்றும், அங்கு 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications