கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் நடக்கும் முக்கிய மாற்றம்.. இறுதிகட்டத்தில் பணிகள்
கோவை: கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தளம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்காங்கே மேம்பாலத்துக்கு வர்ணம் பூசும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுகுறித்து சூப்பர் அப்டேட்டை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை அவிநாசி சாலை மாவட்டத்தின் மையப்பகுதியாக உள்ளது. கோவை விமான நிலையம், டைடில் பார்க், ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் அவிநாசி சாலையில் தான் உள்ளன. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அந்த வழியாகத்தான் கோவை மாநகருக்குள் வரவேண்டும். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் அதிகமாக உள்ளது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வளிக்க அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு, ரூ.1,621 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மேம்பால கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
17.35 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கிருஷ்ணம்மாள் கல்லூரி, ஜிர்ஜி பள்ளி, கேஎம்சிஹெச் மருத்துவமனை, பிஎஸ்ஜி கல்லூரி, லட்சுமி மில்ஸ் பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதமே பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் பணிகள் முடிவடையவில்லை.
இந்நிலையில் அவிநாசி சாலை மேம்பாலத்தில் நீலாம்பூர் வரை ரூ.600 கோடி மதிப்பில் மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை அவிநாசி சாலை மேம்பாலத்தின் (கோல்டுவின்ஸ் வரை) பணிகள் 85 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "உப்பிலிபாளையம் பகுதியில் முக்கிய ஏறு தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. கோல்டுவின்ஸ் பகுதியில் தளம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதேபோல சித்ரா, ஹோப்ஸ், அண்ணா சிலை, நவ இந்தியா பகுதிகளிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தூண்கள் வெளிப்புறத்தில் வர்ணம் அடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என்றனர். இந்நிலையில் அவிநாசி சாலை பாலத்துக்கு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இதைப் பார்த்து கோவை மக்கள் ஆச்சர்யமடைந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications