இருட்டுக் கடை உரிமையாளர் சொல்வதெல்லாம் பொய்! வரதட்சணையே வாங்கவில்லை! கனிஷ்கா கணவர் விளக்கம்
கோவை: இருட்டுக் கடை உரிமையாளர் மகள் கனிஷ்காவை நான் எந்த வரதட்சிணையும் வாங்காமல் திருமணம் செய்தேன் என்றும் எங்கள் குடும்பத்தினர் மீது அவர்கள் சொல்வது பொய் என்றும் கனிஷ்காவின் கணவர் பல்ராம் சிங் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் எங்கள் மீது கனிஷ்கா குடும்பத்தினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். வரதட்சணையே வாங்காமல் ஸ்ரீ கனிஷ்காவை நான் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகுதான் இருட்டுக் கடை என் மாமியார் கைக்கு கிடைத்தது என விளக்கம் கொடுத்துள்ளார்.

திருமணமான 40 நாட்களிலேயே வரதட்சணையாக இருட்டுக் கடை அல்வா உரிமையை தங்களுக்கு வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக தனது தாய் கவிதா சிங்குடன் வந்து கனிஷ்கா புகார் அளித்திருந்தார்.
நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங். இவருடைய மகள் ஸ்ரீகனிஷ்கா சிங்கிற்கும் கோவையை சேர்ந்த தொழிலதிபரான யுவராஜ் சிங்கின் மகன் பல்ராம் சிங்கிற்கும் இடையே பிப்ரவரி 2 ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.
திருமணமான 40 நாட்களிலேயே தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாக தனது தாய் கவிதாவுடன் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று வந்து புகார் அளித்துள்ளார் கனிஷ்கா. புகாரை அளித்துவிட்டு வந்த கனிஷ்கா செய்தியாளர்களிடம் கூறுகையில், என் கணவர் பல்ராம் சிங்கிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது.
அந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டே என்னை திருமணம் செய்து கொண்டு, கொடுமைப்படுத்தினார். இருட்டுக் கடை அல்வாவின் உரிமையை வரதட்சணையாக வாங்கி வரும்படி என்னை கொடுமை செய்தனர்.
என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் டார்ச்சர் செய்தனர். என் மாமனாரும் என் கணவரும் அவர்கள் காரிலேயே என்னை என் தாய் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டனர். இனி அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் இருட்டுக்கடை உரிமத்துடன்தான் வர வேண்டும் என சொன்னார்கள். மேலும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கும் வரதட்சணைப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனிஷ்காவின் வழக்கறிஞர் கூறுகையில் இருட்டுக் கடையுடன் கூடுதல் வரதட்சணை கேட்டு கனிஷ்காவை கணவர் வீட்டார் துன்புறுத்தியிருக்கிறார்கள். திருமணமான ஒரு சில நாட்களிலேயே அந்த கடை உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றித் தரும்படி கேட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications