கோவை சம்பவம்..அந்த 4 பெட்டிகள்..பழைய துணி என்று மனைவியை நம்ப வைத்த முபின்..ஸ்லீப்பர் செல்
கோவை: கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் பதுக்கி வைத்த வெடி பொருட்களை எல்லாம் பழைய துணி என கூறி தனது மனைவியை ஏமாற்றிய தகவல் என்ஐஏ போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட பயங்கரவாத இயக்கத்தின் ஸ்லீப்பர் செல் போலவே வேலை செய்துள்ளார் முபின்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வந்த நிலையில் பண்டிகைக்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 23ஆம் தேதி கோவை கோட்டை மேடு பகுதியில் கார் ஒன்று வெடித்தது. அதில் இருந்த டிரைவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
கார் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தினம் தினம் புது புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. உயிரிழந்த ஜமேசா முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றியுள்ளார். அவரது நடவடிக்கைகள் எல்லாமே மர்மமாகவே இருந்துள்ளது. அதே நேரத்தில் குடும்பத்தில் இருந்தவர்கள் யாருக்குமே அவர் மீது சந்தேகம் வராத அளவிற்கு நடந்து கொண்டுள்ளார்.
தயாராக இருந்த 'ஹிட்லிஸ்ட்’! துப்பாக்கி பட பாணியில் துப்பு துலக்கிய போலீஸ்! கோவையின் ஸ்லீப்பர் செல்?
யார் இந்த முபின்
கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு பெங்களூருவிற்கு வேலைக்கு சென்றார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது திருமணத்திற்கு பெண் பார்த்தனர். அப்போது மாற்றுத்திறனாளி பெண்தான் வேண்டும் என்று கூறி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை திருமணம் செய்து கொண்டார்.
கோவை வந்தது எப்படி
பெங்களூருவில் இருந்து கோவை வந்த முபின் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லையாம். கோட்டை மேடு பகுதியில் புத்தகக் கடையில் வேலை செய்து வந்த முபின் திடீர் என வேலையை விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் கூறினார்.
கோட்டை ஈஸ்வரன் கோவில்
வேலையை விட்ட பின்னரும் கடந்த சில மாதங்களாகவே முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் ஊர் சுற்ற சென்றுவிடுவாராம். அதைப்பார்த்த மனைவி நஸ்ரத்.. ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு முபின் தான் நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாக கூறி சமாளித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறினார். பழைய துணிகளை விற்கும் வேலையை செய்து வந்தார்.
பழைய துணிகள்
அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத் இதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது. தனது மனைவி குழந்தைகளுக்குக் கூட தெரியாமல் வீட்டிலேயே 50 கிலோவிற்கும் மேற்பட்ட வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்திருக்கிறார் முபின்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பின்னர் முபின் வீட்டிலிருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், தீப்பெட்டி, இரண்டு மீட்டர் நீளமுள்ள கிராக்கர் ஃபீஸ்,நைட்ரோ க்ளைரசின், சிகப்பு பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட்), அலுமினியம் பவுடர், ஓஎக்ஸ்ஒய் 99, ஆக்ஸிஜன் சிலிண்டர், சல்ஃபர் பவுடர், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு, கண்ணாடிகள், 9 வாட்ஸ் பேக்டரி, 9 வாட்ஸ் பேட்டரி கிளிப், வயர், ஆணிகள், சுவிட்ச், சிலிண்டர், ரெகுலெட்டர், டேப், கையுறைகள், ஜிகாத் வரிகள்கொண்ட நோட்டுகள் உள்ளிட்ட 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தனை பொருட்களையும் தேடி தேடி ரகசியமாக சேகரித்துள்ளார் முபின். இந்த தகவல்கள் அனைத்தும் என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜிகாத் வரிகள்
முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து 'சிலேட்' ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், 'அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்' என்று கூறி இருந்தார்.
புனித போர்
முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், 'ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு' என்று எழுதி இருந்தார். மேலும் 'புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை' என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.
தற்கொலைப்படை தாக்குதல்
பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து ஷேவ் செய்வர். முபினும் அது போன்று செய்துள்ளது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாகவும் என்ஐஏ போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஸ்லீப்பர் செல்
பயங்கரவாதிகள் பலரும் சாதாரண மனிதர்கள் போலவே நகரப்பகுதிகளுக்குள் ஊடுருவி பல ஆண்டுகள் அமைதியாக இருந்து படிப்படியாக திட்டமிட்டு திடீரென சதி செயல்களை செய்து பலரது உயிரை பறிக்கின்றனர். கோவையில் அதுபோல ஒரு ஸ்லீப்பர் செல் போலவே வசித்து வந்திருக்கிறார் முபின். அவரைப்பற்றி அவரது மனைவி, குழந்தைகளுக்குக் கூட தெரியாமல் போய் விட்டது. இதற்கிடையே கோவையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படும் 900 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பெயர் விவரங்கள் கொண்ட பட்டியலையும் சேகரித்துள்ளனர். அந்த பட்டியலை வைத்து அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.