ஸ்டாலின் ஆக்சன்! கோவை குண்டுவெடிப்பில் என்ஐஏ விசாரணையை ஆதரித்த திருமா! எதிர்த்த வன்னியரசு! குழப்புதே
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏவிற்கு மாற்ற பரிந்துரை செய்ததற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் என்ஐஏ விசாரணையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் வரவேற்று உள்ளார்.
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையை தொடர்ந்து கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏவிற்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும் மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும், என்று குறிப்பிட்டார்.

என்ஐஏ வழக்கு
இந்த வழக்கு விசாரணையை என்ஐஏ விசாரிக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரிந்துரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் வரவேற்று உள்ளார். இன்று சென்னை அடையாற்றில் அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தில் புதிய அம்பேத்கார் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமாவளவன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜனநாயக கட்சி
அதில், திமுக எப்போது ஜனநாயக சக்திகளுடன் களத்தில் இருக்கிறது. இதை பாராட்ட வேண்டும். கோவையில் கார் வெடித்த சம்பவம் அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று. இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும். தொடக்கத்திலேயே இது போன்ற சம்பவங்களை கிள்ளி எறிய வேண்டும். வெளிநாட்டு தொடர்பு இந்த சம்பவத்திற்கு பின் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதை என்ஐஏ போன்ற மத்திய அமைப்புகள் விசாரிப்பதே சரியானது.

என்ஐஏ விசாரணை
ஆனால் என்ஐஏ இதில் நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட வேண்டும். மதத்தை வைத்து, எந்த மதத்தை சேர்ந்தவரும் பயங்கரவாதம் செய்ய கூடாது. அதை ஒடுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இது போன்ற விஷயங்களில் சேர்ந்து செயல்படுவதே சரியாக இருக்கும், என்று திருமாவளவன் என்ஐஏ விசாரணையை வரவேற்று உள்ளார்.

இரண்டு கருத்து
விசிக எம்பி திருமாவளவன் என்ஐஏ விசாரணையை வரவேற்று இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். வன்னியரசு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "கோவை சிலிண்டர் வெடிப்பு சம்மந்தமாக தமிழ்நாடு காவல்துறை விசாரணை மற்றும் நடவடிக்கைகள் சரியான திசை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. தேசிய புலனாய்வு முகமை விசாரணை என்பது மாநில உரிமைகளை பறிப்பதாகும்.

விசிக எதிர்ப்பு
இதை வைத்து வழக்கம்போல, பாஜகவின் வெறுப்பரசியலுக்கு என்.ஐ.ஏ. உதவுமே தவிர வேறொன்றும் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு இந்த விசாரணையை என்ஐஏவிற்கு மாற்றியதை திருமாவளவன் வரவேற்றுள்ள நிலையில், அதை வன்னியரசு விமர்சனம் செய்துள்ளார். விசிகவை சேர்ந்த இரண்டு முக்கியமான தலைவர்கள் ஒரே விஷயத்தில் இரண்டு வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

செந்தில் பாலாஜி
தமிழ்நாடு அரசு இந்த வழக்கை என்ஐஏவிற்கு மாற்றியது ஏன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று விளக்கம் கொடுத்தார். அதில், இந்த வழக்கில் தமிழ்நாடு மட்டும் சம்பந்தப்படவில்லை. மற்ற மாநிலங்களும் இதில் தொடர்பு கொண்டு உள்ளது. கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளவர்களும் இந்த விவகாரத்தில் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக என்ஐஏ விசாரித்தால் சரியாக இருக்கும் என்பதால் வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது, என்று விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications