சீறிய அண்ணாமலை.. மீட்டிங் போட்ட ஸ்டாலின்.. கோவை சம்பவத்தில் அரசியல்? என்ன நடக்கும்?
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கார் வெடிப்பு சம்பவம் காரணமாக அங்கு அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.
முபின் என்ற தீவிரவாதிதான் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

1998 வெடிப்பு
இந்த சம்பவம் கோவை மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் இந்த சம்பவம் அரசியல் ரீதியாக கோவையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உதாரணமாக, கோயம்புத்தூரில் இதற்கு முன்பே 1998ல் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தீவிரவாதத்திற்கு எதிராக தேசியவாத கட்சிகளை ஆதரிக்கும் போக்கு அதன்பின்தான் அதிகரித்தது. இப்போதும் இதே போன்ற சம்பவம் நடந்து உள்ளது. 1998 குண்டுவெடிப்பை போல இதில் உயிர் சேதங்கள் பெரிதாக ஏற்படவில்லை என்றாலும் இந்த குண்டுவெடிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

குண்டுவெடிப்பு
பாதுகாப்பு ரீதியாக இந்த சம்பவம் மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதோடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இதில் நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளார். அவர் வைக்கும் குற்றச்சாட்டில்.. இதை ஏன் போலீசார் குண்டுவெடிப்பு என்று சொல்வது இல்லை. ஏன் இதை சிலிண்டர் வெடிப்பு என்று போலீசார் சொல்கிறார்கள். குண்டு வெடிப்பு என்று சொன்னால் தான் மக்கள் இன்னும் பாதுகாப்பாக இருப்பார்கள். மக்கள் இன்னும் கவனமாக இருப்பார்கள். ஆனால் அதை ஏன் போலீஸ் சொல்வது இல்லை என்று கேட்டுள்ளார்.

முக்கியமான கேள்வி
அவரின் இந்த கேள்வி முக்கியமானது. இதில் தமிழ்நாடு உளவுத்துறையும், போலீசும் சொதப்பிவிட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார். கோவையில் ஏற்கனவே பாஜக கொஞ்சம் வலிமையாக உள்ள நிலையில், இந்த சம்பவத்தை பயன்படுத்தி கோவையில் பாஜக கால் பதிக்க தீவிரமாக முயற்சி செய்யும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இது போன்ற சம்பவங்கள் பாஜக ஆட்சியில் நடக்காது.. தீவிரவாதத்தை நாங்கள்தான் ஒடுக்குவோம்.. என்ஐஏவை திமுக அனுமதிக்கவில்லை என்று கூறி, மக்கள் இடையே தங்களை கொண்டு சேர்க்க பாஜக தீவிரமாக முயற்சி செய்யும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

திமுக
ஆனால் இன்னொரு பக்கம் திமுக ஆதரவு விமர்சகர்களோ.. இந்த விவகாரம் ஆளும் தரப்பிற்கு எதிராக திரும்பாது. மாறாக மக்கள் மேலும் ஆளும் தரப்பிற்கு ஆதரவாகவே இருப்பார்கள் என்கிறார்கள். உதாரணமாக மும்பை குண்டுவெடிப்பிற்கு பின் வந்த தேர்தலில் காங்கிரஸ்தான் வென்றது. புல்வாமாவிற்கு பின் பாஜகதான் வென்றது. காரணம், இது போன்ற சம்பவங்களுக்கு பின் ஆளும் தரப்பிற்கு மக்கள் மேலும் ஆதரவு தருவார்கள் என்பதே சைக்காலஜி. அதோடு ஆளும் திமுக இந்த விவகாரத்தை நேர்த்தியாக கையாண்டு உள்ளது.

நேர்த்தி
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 5 பேரை உடனடியாக கைது செய்தது. உடனே விசாரணை நடத்தியது. தீபாவளி கொண்டாட்டத்தில் பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொண்டது. கலவரம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டது. அதனால் தமிழ்நாடு அரசை இந்த விவகாரத்தில் பாராட்ட வேண்டும். அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது, என்று பாஜகவை சாடி உள்ளார்.

அமைதி
இதெல்லாம் போக இன்று முதல்வர் ஸ்டாலினும் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்துள்ளார். ஒரு பக்கம் பாஜக இதை ஒரு மாதிரி கையாண்டால்... அதை திமுக வேறு மாதிரி கையாண்டு உள்ளது. நாட்கள் செல்ல செல்லத்தான் இந்த சம்பவம் அரசியல் ரீதியாக என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். இப்போது இந்த சம்பவம் நேரடியாக அரசியல் நிலவரங்களை மாற்றவில்லை என்றாலும் வரும் மாதங்களில் அரசியல் ரீதியாக முக்கியமாக திருப்பங்களை இந்த ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications