கோவை கார் வெடிப்பு எதிரொலி! தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்! ரோந்துப் பணிகள் தீவிரம்!
கோவை: கோவையில் கார் கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் கோவையில் நேற்று நிகழ்ந்த கார் வெடிப்பு நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கோவைக்கே சென்று விசாரணை நடத்தியதுடன் அந்த நிகழ்வு குறித்த முழு விவரத்தையும் சேகரித்தார். கேஸ் சிலிண்டர் வெடித்தது எதிர்பாராத விபத்தின் காரணமாகவா அல்லது திட்டமிட்ட நிகழ்வா என போலீஸ் அலசி ஆராய்ந்து வருகிறது.

இதனிடையே கார் வெடிப்பில் பலியான ஐமேஷின் வீட்டில் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாலும் இவர் ஏற்கனவே என்.ஐ.ஏ. விசாரணை வளையத்தில் இருப்பதாலும் கூடுதல் கவனம் செலுத்தி விசாரித்து வருகிறது போலீஸ்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஓட்டி ஏற்கனவே கடை வீதிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்புக்கு நிறுத்தபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை கார் வெடிப்பு நிகழ்வு எதிரொலியாக இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
பொதுவிடங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களை நோட்டமிட்டால் அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications