கோவை நொய்யல் ஆற்றில் தவறி விழுந்து காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழப்பு.. என்ன நடந்தது?
கோவை: கோவை மாநகராட்சி 56 வது வார்டு மாமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி , ஒண்டிப்புதூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நொய்யல் ஆற்றிற்கு கிருஷ்ணமூர்த்தி போன போது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கோவை ஒண்டிப்புதூரில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 62 வயது ஆகிறது. இவர் கோவை மாநகராட்சி 56 வது வார்டு மாமன்ற உறுப்பினரான இருந்து வந்தார். தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி நேற்று (புதன்கிழமை) இரவு 9.30 மணியளவில் ஒண்டிப்புதூருடன் எல் அண்ட் டி பைபாஸ் சாலையை இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இயற்கை உபாதையை கழிப்பதற்காக நொய்யல் பாலம் அருகே தனது வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

பின்னர் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி பாலத்தில் இருந்து இறங்கி பாலத்தின் முனையில் உள்ள ஆற்றங்கரை அருகே சென்றார். ஆனால் இருட்டாக இருந்ததால், அங்கு கொட்டப்பட்டிருந்த உணவு கழிவுகளை மிதித்து, தவறி விழுந்தார். அப்போது ஆற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்ததார். தண்ணீர் வரத்து அதிகமாக இல்லாததால், அவரது உடல் அங்கேயே இருந்தது.
கவுன்சிலர் தவறி விழுந்து இறந்த தகவலை வாகன ஓட்டிகள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து விரைந்து வந்த போலீசார் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அண்மையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் தவறி விழுந்து காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications