கோவையில் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்த பிரபலமான கல்லூரியின் கட்டிடங்கள்.. மாநகராட்சி அதிரடி நோட்டீஸ்
கோவை: கோவை காளப்பட்டியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் கட்டிடங்கள் அந்த பகுதியில் உள்ள வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கல்வி நிறுவன கல்லூரி கட்டிடங்கள் குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி பெறப்பட்ட உத்தரவின் நகல் என அனைத்தையும் கேட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும், யாருடைய கட்டிடமாக இருந்தாலும் நிச்சயம் மிகவும் சிக்கலாக மாறும்.. ஏனெனில் தமிழ்நாட்டில் குளம், குட்டைகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படியே தமிழகம் முழுவதும் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை கண்டறிந்து, அதனை இடித்து அகற்றும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். நீர் வழித்தடங்களில் உள்ள நிலங்களுக்கு, உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும் இனிமேல் பட்டா வாங்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து பத்திரப்பதிவு செய்தவர்கள், பட்டா வாங்கியவர்கள் பலரும் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதேபோல் நீர்வழிப்பாதை நிலம் என்று தெரியாமல் ஏமாந்து வாங்கியவர்களும் சிக்கலை சந்தித்துள்ளார்கள்.
கோவை காளப்பட்டியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் கட்டிடங்கள் அந்த பகுதியில் உள்ள வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. இதையடுத்து நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கல்வி நிறுவன கல்லூரி கட்டிடங்கள் குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் , தனியார் கல்லூரியின் முதல்வர் மற்றும் தனியார் கல்வி நிறுவன அறக்கட்டளைக்கு நோட்டீஸ் வழங்கி இருக்கிறது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: "கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளப்பட்டி கிராம் 5-வது வார்டில் வாய்க்கால் இருந்ததாக அரசு ஆவணங்களில் உள்ளது. இதற்கான வரைபடத்திலும் வாய்க்கால் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
ஆனால் தற்போது அந்த இடத்தில் கட்டிடங்கள் மற்றும் கல்லூரிகள் கட்டப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடங்களுக்கு மாநகராட்சியின் கட்டிட அனுமதி உத்தரவு பெறப்பட்டு இருப்பின், இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் ஆவணங்களை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி, திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி பெறப்பட்ட உத்தரவின் நகல், வாய்க்கால் மீது கட்டிடம் அமைக்க பெறப்பட்ட அனுமதி நகல், கட்டிட அனுமதி பெறப்பட்ட வரைபட நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஆவணங்கள் எதுவுமில்லை என கருதப்பட்டு சட்டப்படியான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது..
இதுகுறித்து கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூறுகையில், கோவை மாநகராட்சியில் நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக காளப்பட்டியில் வாய்க்காலை ஆக்கிரமித்து பிரபல தனியார் கல்வி நிறுவனத்தின் கல்லூரி கட்டிடங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
கல்லூரி நிர்வாகம் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் வரைபடத்தை வைத்துதான் எத்தனை ஏக்கர் நீர்வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது, என தெரியவரும். நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. எனவே கல்லூரி நிர்வாகம் சமர்ப்பிக்கும் ஆவணங்களை வைத்து ஆக்கிரமிப்புகள் கணக்கிடப்பட்டு அகற்றப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications