கோவை மாநகராட்சியில் 3 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.. வீட்டு மனை வாங்குவோர் அறிய வேண்டிய மிஸ்டேக்
கோவை: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ரூ.3 கோடி மதிப்புளள ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர். குழந்தைகள் விளையாட்டு திடல் அமைக்க இருந்த இடத்தை சாலையாக பயன்படுத்த ஆக்கிரமித்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இடம் வாங்கி போடுறீங்க அப்படீன்னா, வெறும் பத்திரத்தை மட்டும் நம்பாமல், உண்மையில் அந்த நிலம் அவர் பெயரில் பட்டா இருக்கிறதா என்பதை உறுதிசெய்துவிட்டு வாங்குவது நல்லது. அதை போல் வாங்கும் நிலத்திற்கு பாதை சரியாக உள்ளதா. பாதை நிலம் இவர்களுடையது தானா அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்து பாதை உருவாக்கி பயன்படுத்துகிறார்களா என்பதை பார்த்துவிட்டு வாங்குங்கள்.

ஏனெனில் பாதை இல்லாத நிலத்திற்கு அரசு நிலம் தான் பாதை என்றாலும், அரசு அந்த நிலத்தை பொதுபயன்பாட்டிற்கு வைத்துள்ளதா அல்லது ஏதேனும் ஒரு விஷயத்திற்காக வைத்துள்ளதா என்பதை அறியுங்கள். இல்லாவிட்டால் பாதை இல்லாத நிலத்தை வாங்கி அவதிப்படும் நிலை வரலாம். கோவையில் அரசு பூங்காவிற்காக வைத்திருந்த நிலத்தை பாதையாக பயன்படுத்தியதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை அதிரடியாக மீட்டுள்ளனர். 35 வருடமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை நேற்று மீட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 85-வது வார்டு அம்மன் நகர் பகுதியில் பூங்கா, குழந்தைகள் விளையாட்டு திடல் அமைக்க பொது பயன்பாட்டுக்கு 30 சென்ட் இடம் இருந்தது. இந்த பூங்கா இடத்தை 30 அடி ஆக்கிரமித்து லே-அவுட்டுக்கு செல்ல சாலையாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அம்மன் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர், மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அதிகாரி குமார், தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி ஜெயலட்சுமி, போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா இடத்தை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அங்கு கம்பி வேலி அமைத்து அறிவிப்பு பலகை வைத்தனர். அந்த இடத்தின் மதிப்பு ரூ.3 கோடி என்றும், 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications