எல்லை மீறிய ‛பிராங்க்’ வீடியோ.. பிரபல யூடியூப் சேனல் மீது பாய்ந்த வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி
கோவை: பொதுமக்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் ‛‛பிராங்க்''(Prank) வீடியோ எடுத்து வெளியிட்டதாக கூறி ‛கோவை 360 டிகிரி' யூடியூப் சேனல் மீது கோவை போலீசார் முக்கிய பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமானவர்கள் யூடியூப் சேனல் துவங்கி வீடியோ பதிவேற்றி வருகின்றனர். சிலர் தங்களின் தனித்திறமைகளை காட்டி வரும் நிலையில் சிலர் ‛பிராங்க்' என்ற பெயரில் பொதுஇடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு இந்தியாவின் பல இடங்களில் கடும் எதிர்ப்பு உள்ளது. சில இடங்களில் ‛பிராங்க்' வீடியோ எடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் ‛பிராங்க்' வீடியோ எடுக்க கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ‛பிராங்க்' வீடியோக்கள் தொடர்ந்து செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பரப்புறது எல்லாம் பொய் செய்தி.. வீடியோ.. 8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு
பிராங்க் வீடியோ புகார்
குறிப்பாக கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக ‛பிராங்க்'வீடியோ அதிகமாக எடுக்கப்படுவதாக புகார்கள் சென்றன. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலான இத்தகைய செயலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோவை மாநகர போலீசாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் முன்பு கோவை மாநகர போலீஸ் சார்பில் எச்சரிக்கையுடன் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கோவை போலீஸ் எச்சரிக்கை
அந்த அறிவிப்பில், ‛‛பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களான பூங்காக்கள், நடைப்பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குறும்புத்தனமாக செயல்களில் ஈடுபட்டு வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் பதிவேற்றுவது அதிகரித்து வருகிறது. இது அமைதியை தேடும் மக்களுக்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்துகிறது. சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம் சுழிக்கும் வகையில் எதிர்பாலினத்தவரை தொட்டு அநாகரீகமாக நடிக்கிறார்கள். இது வயதானவர்கள், பெண்கள் இடையே விரும்பத்தகாத செயலாக உள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி வீடியோ பதிவிடுவதால் அது அவரையும் பாதிக்கிறது. எனவே கோவை மாநகரில் பிராங்க் வீடியோ தொடர்பாக புகார்கள் வந்தால் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும்'' என கூறப்பட்டு இருந்தது.
யூடியூப் சேனல் மீது வழக்கு
இந்நிலையில் தான் தற்போது ‛பிராங்க்' வீடியோக்கள் பதிவிட்டு வரும் ‛கோவை 360 டிகிரி' எனும் யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் சார்பில் அந்த யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வழக்கின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
போலீஸ் கூறுவது என்ன?
‛‛கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவில் சைபர் க்ரைம் போலீசார் Prank video தொடர்பான கண்காணிப்பு பணியை செய்து வந்தன. ‛கோவை 360 டிகிரி' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். அதன்பேரில் சைபர் க்ரைம் காவல் நிலைய குற்ற எண் 39/2022 U/s 354D IPC & 4 of TNPHW ACT r/w 66E IT Actன்படி அந்த யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Prank Videos தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.