கமல் கார் கொடுத்த கோவை டிரைவர் ஷர்மிளா.. சைபர் கிரைம் போலீஸ் வழக்கு.. காரணம் என்ன?
கோவை: டிரைவர் ஷர்மிளா மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காட்டூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி வந்தவர் டிரைவர் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றவர். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார்.

ஆட்டோ ஓட்டுநரான தந்தையைப் பார்த்துத் டிரைவிங் கற்றுக்கொண்டு சில காலம் ஆட்டோ ஓட்டுநராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்தார். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு கோவையின் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க, டிரைவர் வேலை கிடைத்தது.
இதனையடுத்து அதிகம் பிரபலமானார் ஷர்மிளா. பல யூடியூப் சேனல்களும். பிரபல இணைய தள பக்கங்களிலும் இவரது பேட்டி வெளியானது. முகநூல் பக்கத்தில் இவர் பதிவிடும் ரீல்ஸ் பிரபலமானது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் காந்திபுரத்தில் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்து வாழ்த்தினார்.
அதற்கு அடுத்த சில நாட்களில் திமுக எம்.பி கனிமொழியும் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது ஷர்மிளாவிற்கு வாழ்த்து கூறியதோடு சிறிது நேரத்தில் இறங்கி விட்டார். இதனையடுத்து சில மணி நேரங்களில் பஸ் டிரைவர் ஷர்மிளா பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதனையடுத்து இளம்பெண் ஷர்மிளாவுக்கு அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்து பேசினார். ரூ.16 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்தார். அந்த கார் மூலம் தனியாக கால் டாக்சி சேவையில் ஈடுபட்டு வந்தார் ஷர்மிளா.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கோவை சத்தி சாலையில், சங்கனூர் சந்திப்பில் ஷர்மிளா ஓட்டிச் சென்ற காரை, அங்கு பணியில் இருந்த காட்டூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு துணை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி என்பவர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை இயக்கியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே ஷர்மிளா, போக்குவரத்து சிறப்பு துணை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் வீடியோவை பதிவிட்டு, அதில் அவர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், இது தொடர்பாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவிற்கு பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்த பலரும், அநாகரிகமான வார்த்தைகளால் பெண் காவலரை விமர்சித்திருந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார், இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் டிரைவர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதை பயன்படுத்தி போலீஸ் குறித்து அவதூறாக தகவல் பரப்பியதாக டிரைவர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications