மகளை டாக்டர் ஆக்க விரும்பிய விஜயகுமார்... கடைசியாக ஆசைப்பட்டது இதுதான்.. உருக்கமான தகவல்
கோவை: தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், தனது மகளை டாக்டர் ஆக்க ஆசைப்பட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சொந்த ஊர் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியாகும். நேற்று தேனி ரத்தினம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

டிஐஜி விஜயகுமார் குறித்து பல்வேறு உருக்கமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜயகுமாரின் தந்தை செல்லையா ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார். தாய் ராஜாத்தி ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார். விஜயகுமாருக்கு பிரேமலதா என்ற அக்காவும், நிர்மலாதேவி என்ற தங்கையும் இருக்கிறார்கள்.
விஜயகுமாரின் மனைவி பெயர் கீதா வாணி. அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் அவர் பெயர் நந்திதா. விஜயகுமார் தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பெற்றோரின் விருப்பத்தின் பேரில் என்ஜினீயரிங் படித்தார். விஜயகுமார் 2000-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இந்து சமய அறநிலையத்துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். ஆனால் போலீஸ் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை நோக்கி பயணிக்க தொடங்கினார். அந்த ஆண்டே (2000) குரூப்-1 தேர்வும் எழுதினார். அதில் வெற்றி பெற்று 2002-ம் ஆண்டு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனார்.
போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிக்கொண்டே சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதினார். இவர் 6 முறை முயற்சி செய்து 4 முறை மெயின் தேர்வு வரையும், 3 முறை நேர்முக தேர்வு வரையும் சென்றார். ஆனால் பணி கிடைக்கவில்லை. கடைசி முயற்சியாக 7-வது முறை முயற்சித்து 2009-ம் ஆண்டில் ஐ.பி.எஸ். அதிகாரியானார். அப்போது அவர் எடுத்த மதிப்பெண்ணுக்கு ஐஏஎஸ் ஆக தேர்வு செய்திருக்கலாம்.
ஆனால் போலீஸ் பணியின் மீதான ஆசையால் ஐஏஎஸ் பணியை தேர்வு செய்யாமல் ஐபிஎஸ் பயிற்சிக்கு சென்றார். ஐ.பி.எஸ். பயிற்சிக்கு சென்ற போது கூட டி.எஸ்.பி. பணியை ராஜினாமா செய்ய வில்லை. தமிழகத்தில் தான் பணியாற்ற வேண்டும் தான் எனது ஆசை என்று கூறியவர். கடைசி முயற்சியில் ஐபிஎஸ் ஆனார். கடைசியாக சென்னை அண்ணாநகரில் உதவி கமிஷனராக பணியாற்றிய போது டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று கோவை சரகத்துக்கு நியமிக்கப்பட்டார்.
டிஐஜி விஜயகுமாரின் மனைவி கீதாவாணி டாக்டர் ஆவார். விஜயகுமார் தனது மகள் நந்திதாவை டாக்டராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக அவர் தனது மகளை நீட் தேர்வும் எழுத வைத்தார். அதில் தேர்வான அவரை எந்த கல்லூரியில் படிக்க வைக்கலாம் என்று ஆலோசித்து வந்தார். மகளின் ஆசையை நிறைவேற்ற கொஞ்சம் கொஞ்சமாக பணமும் சேர்த்து வந்துள்ளார். அவரது மகள் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற நிச்சயம் டாக்டராகி விடுவார்.
இந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக டிஐஜி அந்தஸ்தில் உள்ள விஜயகுமார் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் காவல்துறையில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை மீது அளவுக்கடந்த விருப்பமும் ஆசையும் கொண்ட டிஐஜி விஜயகுமார் தற்கொலையை காவல்துறையினரால் ஏற்க முடியவில்லை. அப்படி என்ன பிரச்சனையால் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்ற கேள்வியே தொடர்ந்து எழுகிறது.












Click it and Unblock the Notifications