கோவை மாவட்ட வருவாய் அதிகாரி, தாசில்தார் அதிரடியாக சஸ்பெண்ட்.. விசாரித்தால் மிகப்பெரிய வில்லங்கம்
கோவை: கோவையில் கையகப்படுத்திய நிலத்துக்கு பத்திரப்பதிவு செய்யாமல் ரூ.10 கோடி இழப்பீடு வழங்கிய விவகாரத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அனிதா ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சிறப்பு பிரிவை சேர்ந்த தாசில்தார் பர்சானாவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமான கோவையில் உள்கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் பலப்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. மெட்ரோ ரயில்கள், புறநகர் ரயில்கள், விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றின் தேவை உருவாகி உள்ளது. குறிப்பாக விமான நிலைய விரிவாக்கம் என்பது மிகவும் அவசியமாகும். அதற்கு கோவை விமான நிலையத்தை ஒட்டி 644 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 461.90 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானதாக இருக்கிறது..

இந்த நிலத்தை கையகப்படுத்தும் பணியில் சிறப்பு பிரிவை சேர்ந்த மாவட்ட வருவாய் அதிகாரி(நில எடுப்பு) அனிதா தலைமையில் தாசில்தார் பர்சானா மற்றும் சர்வேயர்கள் ஈடுபட்டு வந்தார்கள். கையகப்படுத்தும் நில உரிமையாளர்களுக்கு குடியிருப்பு நிலம் என்றால் சதுர அடிக்கு ரூ.1,500, விவசாய நிலம் என்றால் சதுர அடிக்கு ரூ.900 என இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இந்த சூழலில் விமான நிலையத்தை ஒட்டியுள்ள நில உரிமையாளர்களில் ஒருவர், தனது நிலத்தின் மதிப்பு அதிகம், அரசு நிர்ணயித்துள்ள தொகை குறைவாக இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நில உரிமையாளர் கோரும் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு அந்த தொகையை வழங்கினால் கையகப்படுத்தும் அனைத்து நில உரிமையாளர்களுக்கும் கூடுதலாக தொகை வழங்க நேரிடும் என்பதால், அவருக்கு தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் நில உரிமையாளர், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதை அறிந்ததும், அரசு பெயருக்கு நில உரிமையை மாற்றி, பத்திரப்பதிவு செய்யாமலேயே, உரிமையாளருக்கு ரூ.10 கோடியை இழப்பீடாக வழங்கியதாக கூறப்படுகிறது. அதாவது நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமலேயே இழப்பீடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் விசாரணை நடத்தினார்.
இதில் தவறு நடந்தது உறுதியானதால், சிறப்பு பிரிவை சேர்ந்த தாசில்தார் பர்சானாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதோடு மாவட்ட வருவாய் அதிகாரி அனிதா மீதான குற்றச்சாட்டு தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதனை தொடர்ந்து அனிதாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாள் ஆகும். அதற்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications