கூடை கூடையா மீன்கள்.. 1 ரூபாயில் கோட்டையா கட்ட போறே? மீன் கடைக்காரர் கிண்டல்! கோவை நீதிபதி ஒரே போடு
கோவை: மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மூன்றாவது வாரம் முடிந்துள்ள நிலையில், மீன்களின் வரத்து அதிகரித்து வருகின்றன.. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும், மீன்பிரியர்களும், விதவிதமான மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. அந்தவகையில் கோவையிலும் மீன் மார்க்கெட்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.. இந்நிலையில், பலரும் கவனிக்கத்தக்க சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இந்த மீன் விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது ஆச்சரியத்தை தந்துள்ளது.. அதைவிட நீதிபதி வழங்கிய உத்தரவு, அதற்கு மேல் ஆச்சரியத்தை தந்து வருகிறது. என்ன நடந்தது?
கடந்த சனிக்கிழமையன்றுகூட, சென்னை காசிமேட்டில் 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பியிருந்தன.. அப்போது தேங்காய் பாறை, மஞ்சள் பாறை, கடல் விரால் உள்ளிட்ட மீன் வகைகள், அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

காசிமேட்டில் பரபரப்பு
மக்கள் கூட்டம் அதிகம் இருந்தும் மீன் வகைகள் அதிகம் இருந்ததால், விலை சற்று குறைவாகவும் கணிசமான விலையிலும் விற்பனை செய்யப்பட்டன.. இதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையே 1:00 மணிக்கே காசிமேட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆர்வமுடன் பேரம் பேசி அனைவரும் மீன் வாங்கி சென்றனர்.
இதில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் பைந்தமிழன் பலருக்கும் வியப்பை தந்திருந்தார்.. காரணம், இவர், கோவளம் பகுதியில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, 150 கிலோ பால் சுறா மீன் அவரது வலையில் சிக்கியிருக்கிறது.. இந்த மீன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை பலரும் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.. இந்த மீன், கிலோ 300 ரூபாய் என, 45,000ரூபாய்க்கு விற்பனையாகுமாம்.
மீன்கடைக்காரர் கிண்டல்
இப்படிப்பட்ட சூழலில்தான் கோவையிலும் ஒரு வியப்பூட்டும் சம்பவம் நடந்துள்ளது. கோவை, கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் ராஜா... சிறை காவலரான இவர், மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, "பிஷ் புட்டீ" என்ற மீன் கடையில், கடந்த 2024 ஆகஸ்ட், 28ம் தேதி மீன் வாங்க சென்றிருக்கிறார்..
ஒரு கிலோ மீன் 299 ரூபாய் என்று கடைக்காரர் சொல்லிஉள்ளார்.. ராஜாவும், தன்னுடைய கூகுள் பே மூலம் பணம் செலுத்தியபோது, மீன்கடைக்காரர் 300 ரூபாய் என்று பில் தந்துள்ளார்.. அத்துடன், ராஜாவின் வங்கி கணக்கிலிருந்தும், கியூஆர் கோடு மூலமாக, 300 ரூபாய் எடுக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த ராஜா
இதைப்பார்த்து அதிர்ந்த ராஜா, எதக்காக 1 ரூபாய் கூடுதலாக எடுத்திருக்கீங்க? என்று கேட்டார். அதற்கு மீன்கடைக்காரர், உன்னுடைய 1 ரூபாயில், நீ என்ன கோட்டையா கட்டப்போற? என்று கிண்டலடித்திருக்கிறார்.
1 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டதுடன், நக்கலாகவும் தன்னை பேசியது, ராஜாவுக்கு மன உளைச்சலை தந்துவிட்டது.. எனவே மீன்கடைக்காரர் மீது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ராஜா வழக்கு தாக்கல் செய்தார்.
பரபர உத்தரவு
இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், "மனுதாரரிடம் கூடுதலாக பெற்ற 1 ரூபாயை, எதிர்மனுதாரர் திருப்பி கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 2,000 ரூபாய், வழக்கு செலவு, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்" என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்..
அதாவது 1 ரூபாய் கூடுதலாக எடுத்ததற்கு 5 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார் மீன்கடைக்காரர்.. இந்த சம்பவம் கோவையில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications