இனி வகை வகையான உணவுகளையும் ஒரே இடத்தில் ருசிக்கலாம்.. கோவை மக்களே ரெடியாகுங்கள்!
கோவை: தமிழ்நாட்டில் இப்போது வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கோவை இருக்கிறது. ஐடி துறை வளர்ச்சியால் மற்ற நகர மக்கள் மட்டுமின்றி, பிற மாநில மக்களும் கூட கோவைக்கு வருகிறார்கள். இதற்கிடையே கோவை மக்கள் வகை வகையான உணவை ஒரே இடத்தில் ருசிக்கும் வகையில் அட்டகாசமான ப்ராஜெக்ட் கோவைக்கு வந்துள்ளது.
இத்தனை காலம் கோவையில் பெரியளவில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லாமலேயே இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அந்த நிலைமை மெல்ல மாற தொடங்கியுள்ளது.

மால்கள், உக்கடம் வலாங்குளம் மிதக்கும் பாலம், பூங்காக்கள் என்று பல புதிய திட்டங்கள் கோவைக்கு வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே அடுத்த கட்டமாக இப்போது கோவையில் புட் ஸ்ட்ரீட் திறக்கப்பட்டுள்ளது.
புட் ஸ்ட்ரீட்:
பானி பூரி முதல் சிக்கன் வரை அனைத்து விதமான உணவுகளும் ஒரே இடத்தில் கிடைப்பது தான் புட் ஸ்ட்ரீட். இங்கு ஒரே உணவகம் மட்டும் இருக்காது. பல்வேறு சிறு கடைகளும், தெருவோர வியாபாரிகளும் கூட கடைகளை வைத்திருப்பார்கள். பொதுவாக இங்கு ஆரோக்கியமான முறையிலேயே உணவுகள் சமைக்கப்படும் என்பதால் நம்பி இதைச் சாப்பிடலாம்.
முன்பு வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் மட்டுமே இருந்த இந்த புட் ஸ்ட்ரீட் டிரெண்ட் இப்போது தான் மெல்லத் தமிழ்நாட்டிற்கும் வந்துள்ளது. ஏற்கனவே சென்னையில் இதுபோல ஓரிரு புட் ஸ்ட்ரீட்கள் இருக்கும் நிலையில் இப்போது புட் ஸ்ட்ரீட் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு சரவணம்பட்டி பகுதியில் ஒரு புட் ஸ்ட்ரீட் இருக்கும் நிலையில், இப்போது வஉசி பார்க் சாலையில் புட் ஸ்ட்ரீட் திறக்கப்பட்டுள்ளது.
எங்கே அமைந்துள்ளது:
நேஷனல் ஹெல்த் மிஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசும் கோவை மாநகராட்சியும் இணைந்து கூட்டு முயற்சியாகக் கோவை வஉசி பார்க் சாலையில் இந்த புட் ஸ்ட்ரீட் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புட் ஸ்ட்ரீட்டில் மொத்தம் 24 கடைகள் இருக்கிறது.
உணவு சுகாதாரமான முறையில் விற்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கை கழுவ தனி இடம், தண்ணீர் கனெக்ஷன், வடிகால் வசதிகள் என அனைத்துமே எல்லா கடைகளுக்கும் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு வரும் பொதுமக்கள் உணவுகளை ரசித்து ருசித்துச் சாப்பிட ஏதுவாக இங்கு சீட்டிங் வசதிகளும் செய்யப்பட உள்ளது.
கடைகள் எப்போது திறக்கப்படும்:
இதற்கான பணிகள் கடந்தாண்டு அக். மாதம் தொடங்கப்பட்டது. டெண்டர் செயல்முறையில் தொடக்கத்தில் சில தாமதம் ஏற்பட்டது. முதல் ஏலத்தில் 10 கடைகள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டன.. ஒவ்வொரு கடைக்கும் அடிப்படைத் தொகை ₹13,750 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், ஏலத்தின் முடிவில் ஏது கிட்டதட்ட 3 மடங்கு வரை உயர்ந்தன. மீதமுள்ள 14 கடைகளுக்கான இரண்டாவது ஏலம் டிசம்பர் 18ம் தேதி நடத்தப்பட்டு, குத்தகைக்கான டெண்டர் விடப்பட்டது.
இப்போது அனைத்து கடைகளும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இருப்பினும் கடைக்காரர்கள் மாநகராட்சிக்குப் பணம் செலுத்தும் செயல்முறையை இன்னும் முடிக்கவில்லை. இதனால் கடைகளைத் திறப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு மாதத்திற்குள் அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "பேமெண்ட் வந்ததும், சாவிகள் ஒப்படைக்கப்படும். அங்குள்ள அனைத்து கடைகளும் ஒரு மாதத்திற்குள் திறக்கப்படும். இங்குப் பொதுமக்களுக்குச் சுகாதாரமான உணவு வழங்குவது உறுதி செய்யப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications