கோவையில் ரூ.60 லட்சம் நிலம்.. 72 வயது பாட்டிக்கு வழிகாட்டிய வில்லங்க சான்றிதழ்.. சிக்கிய பிரமுகர்
கோவை: போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்து, அதனை வைத்து பத்திரப்பதிவு செய்தவர்கள், வில்லங்க சான்றிதழில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வில்லங்க சான்றிதழால் வில்லங்கங்கள் வெளிவந்துள்ளது. கோவையில் நடந்த ரூ.60 லட்சம் நில மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். ஈச்சனாரியை சேர்ந்த கார்த்திகேயன் உள்பட சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததை 72 வயது மூதாட்டி எப்படி கண்டுபிடித்தார் என்பதை பார்ப்போம்.
போலி ஆவணங்கள் மூலம் யாராவது உங்கள் நிலத்தை மோசடி செய்தால், அந்த நிலத்தை திரும்ப பெற முடியுமா என்ற கேள்வி இருக்கும். ஏனெனில் இன்றைக்கு பல பகுதிகளில் வயதானவர்களை ஏமாற்றி, அவர்களின் ஆவணங்களை போல் போலி ஆவணங்களை உருவாக்கி நில மோசடி செய்வது நடக்கிறது. இப்படி நடைபெறும் மோசடிகளை தடுக்கவே புதிய பத்திரப்பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது.

நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியும்
அதேநேரம் தற்போது உள்ள நடைமுறைப்படி நீதிமன்றம் மூலம் மட்டுமே போலி ஆவணங்கள் மூலம் செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி நிரூபித்து பத்திரப்பதிவை ரத்து செய்து, நிலத்தை உங்கள் பெயருக்கு கொண்டுவர முடியும். அதேபோல் நில மோசடி செய்தவர்களையும் சிறையில் தள்ள முடியும். உங்கள் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தவர்கள் குறித்து புகார் அளித்தால், போலீசார் உடனே கைது செய்து அவர்களை சிறையில் அடைப்பார்கள். அதன்பிறகு படிப்படியாக விசாரணைக்கு பிறகு உங்கள் நிலம் உங்களுக்கு கிடைக்கும்.
வில்லங்க சான்றிதழ்
அதேநேரம் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வில்லங்க சான்றிதழ் வாங்கி பாருங்கள். அதில் ஏதேனும் வில்லங்கங்கள் உங்களுக்கு தெரியாமல் வந்திருந்தால் கண்டுபிடித்துவிடலாம். ஏனெனில் நம்முடைய நிலம் நம் பெயரில் தான் இருக்கிறது எனறு நினைக்காமல் அடிக்கடி நில ஆவணங்களை பரிசோதித்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுடைய நில ஆவண நகல்களை வைத்து, அப்படி போலி ஆணவங்களை மோசடியாக உருவாக்கிவிட முடியும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். கோவையில் 72 வயது மூதாட்டி வில்லங்க சான்றிதழ் மூலம் தனது நிலத்தில் நடந்த மோசடியை கண்டுபிடித்துள்ளார்.
நிலம் வாங்கினார்
கோவை சுந்தராபுரத்தில் 72 வயதாகும் மரகதம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் கடந்த 1996-ம் ஆண்டு சண்முகம் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். மரகதம் தனது முதல் கணவரின் சொத்துக்கள் மூலம் கிணத்துக்கடவு அருகே அரிசிபாளையம் பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு 8 சென்ட் நிலம் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் மரகதத்துக்கும், அவருடைய 2-வது கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் மரகதம் தனது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய வில்லங்க சான்றிதழ் பெற்றார். அப்போது அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
60 லட்சம் ரூபாய் நிலம்
இது தொடர்பாக அவர் விசாரணை செய்ததில் ஈச்சனாரியை சேர்ந்த கார்த்திகேயன் உள்பட சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.60 லட்சத்துக்கும் மேல் இருக்கிறது என்பதும் தெரியவந்தது. இது குறித்து கடந்த 2022-ம் ஆண்டு மரகதம் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் கைது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈச்சனாரியை சேர்ந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய நபரான தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான டேனியல் (57) என்பவரை தேடி வந்தனர். திருப்பூரில் பதுங்கி இருந்த டேனியலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications