கோவை ஈஷா யோகா மைய வழக்கு.. மீண்டும் புதிதாக விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவு
கோவை: ஈஷா யோகா மைய வழக்கை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை ஈஷா யோகா மையம், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பதிலாக, 40 ஆயிரம் செலுத்தினால் போதும் என்ற தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள ஈஷா பவுண்டேசன் அமைப்பு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து, ஜிஎஸ்எம் ( குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கம்யூனிகேஷன்) பிஆர்ஐ இணைப்பை பெற்றிருந்தது.
அதன் மூலம் ஈஷா மையத்திற்குள் 500 உட்கட்டமைப்பு இணைப்புகளை பயன்படுத்தியதில் 2 கோடியே 50 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 2017 ல் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து ஈஷா யோகா மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, ஆர்பிட்ரேஷன் எனும் இசைவு தீர்ப்பாயத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த இசைவு தீர்ப்பாயம், 44 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, பிஎஸ்என்எல் நிறுவன கோவை முதன்மை பொதுமேலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கோவை ஈஷா யோகா மையம் தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ,ஈஷா யோகா மையம் 44 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற இசைவு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று இசைவு தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.