கோவை கவுண்டம்பாளையம் கனிமொழி கேஸ் ஓய்வதற்குள் தவெக ஆனந்த் மோகன் சகோதரிக்கு வந்த சோதனை பாருங்க
கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து அரசு அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கையாண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கோவையில் கனிமொழி சந்தோஷ் ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகளை வைத்து கூட்டம் நடத்தியது சர்ச்சையான நிலையில், தற்போது ஈரோட்டில் ஆனந்த் மோகன் பெண் எஸ்பியை மிரட்டிய விவகாரம் வெடித்துள்ளது.. தவெக எம்எல்ஏக்களின் இந்த அதிகார வரம்பு மீறிய தொடர் செயல்கள் அரசியல் வட்டாரத்தில் தவெக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது..
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கவுண்டம்பாளையம் தொகுதி பெண் சட்டமன்ற உறுப்பினர் (MLA) கனிமொழி சந்தோஷ், அரசு அதிகாரிகளுடன் தனது தனியார் ஜோதிட ஆலோசனை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தியது பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர் நடத்திய இந்த ஆலோசன்ைக் கூட்டத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவர் சிம்மாசனம் போன்ற வடிவமைக்கப்பட்ட சோபாவில் அமர்ந்திருக்க, அரசு அதிகாரிகள் சாதாரண நாற்காலிகளில் தனித்தனியாக அமர வைக்கப்பட்டிருந்த விதம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த கனிமொழி சந்தோஷ், இந்த கூட்டம் தனது இல்லத்தில் நடக்கவில்லை என்றும், இன்னும் திறக்கப்படாத தனது புதிய எம்.எல்.ஏ அலுவலகப் பணிகள் முடிவடையாததால், தற்காலிகமாகத் தனது ஜோதிட அலுவலகத்தில் நடந்ததாகவும், அதிகாரிகள் தன்னிச்சையாகவே அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
கவுண்டம்பாளையம் கனிமொழி
இருந்தாலும் அவசரக் காலப் பேரிடர் தவிர மற்ற நேரங்களில் அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டங்களை இதுபோன்ற தனியார் இடங்களில் நடத்துவதைத் தவிர்த்து, அரசு அலுவலகங்களிலேயே நடத்தியிருக்க வேண்டும் என அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
கோவை கனிமொழி சந்தோஷ் விவகாரம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, ஈரோட்டில் தவெகவின் இன்னொரு எம்எல்ஏவால் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.
ஈரோடு ஆனந்த் மோகன்
ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் தவெகவை சேர்ந்த ஆனந்த் மோகன் வெற்றி பெற்று, எம்எல்ஏ.வாக பொறுப்பேற்றார். இதையடுத்து, ஈரோடு வந்த எம்எல்ஏ ஆனந்த் மோகன், டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு ரூ.20 அதிக விலைக்கு விற்றதாக குடிமகன்கள் அளித்த புகாரை தொடர்ந்து, டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று பஞ்சாயத்து செய்தார்.
அதேபோல், சாலைப்பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்தார். இந்நிலையில், எம்எல்ஏ ஆனந்த் மோகன் மற்றும் அவரது சகோதரி இருவரும் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் மாவட்டம் சார்ந்து குற்ற நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும், அதற்கு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதியை கோப்புகளை எடுத்து கொண்டு எம்எல்ஏ முகாம் அலுவலகத்திற்கு விரைவாக வர சொல்லுங்கள் என தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
எதுக்கு ஃபைல்கள்
இதையறிந்த மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி, ''எம்எல்ஏ.வை நாம் ஏன் சந்திக்க வேண்டும். அவருக்கு எதுக்கு மாவட்ட பைல்கள்'' என அதிருப்தி அடைந்தார். மேலும் கோபமடைந்த எஸ்பி, மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.. இதையறிந்து அவரும் அதிர்ந்து போனார். எம்எல்ஏ.வின் அதிகாரம், அவர்களது பணி என்னவென்று தெரியாமல் மேற்கு தொகுதி தவெக எம்எல்ஏ சுற்றி வருகிறார். அவரிடம் எடுத்து கூறினால் புரிந்து கொள்வார் என காவல் துறையினர் எஸ்பி.யை சமாதானம் செய்துள்ளனர்..
இதையடுத்து, பெருந்துறை டிஎஸ்பி, எம்எல்ஏவின் அப்பா கலைச்செல்வனிடம் கலெக்டர், எஸ்பி ஆகியோர் புகார் அளித்தால் எம்எல்ஏ பதவியை தொடர்வதற்கே சிக்கல் எழும், எம்எல்ஏ இப்படி செய்யக்கூடாது, தவறான முன்னுதாரணமாகி விடும் என எச்சரித்துள்ளார்.
தவெக எம்எல்ஏக்கள் சர்ச்சை
இதுகுறித்து எம்எல்ஏ.விடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதனால், எம்எல்ஏ ஆனந்த் மோகன் தனது தவறை உணர்ந்து, உடனடியாக மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார். மேலும், நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்தடுத்து தவெக எம்எல்ஏக்கள் அதிகார வரம்புகளை மீறி அரசு அதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் விதம், அரசியல் வட்டாரத்தில் தவெக எம்எல்ஏக்களால் தொடர் சர்ச்சை என்ற விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது..












Click it and Unblock the Notifications