கோவையில் அதிசய கிராமம்... 6000 மரம் நட்டு.. பட்டாசு வெடிக்காமல் பறவைகளை காக்கும் மக்கள்
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கிட்டாம்பாளையம் கிராமத்தினர் 20 வருடங்களாக பட்டாசுகளை வெடிக்காமல் ஒன்றிணைந்து பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.. அத்தி மரம், புளிய மரம், நாவல் மரம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வைத்து கிராமத்தை சுற்றி வனப்பகுதியில் பராமரித்து வருகிறார்கள் கிராம மக்கள்.
தீபாவளிக்காக பட்டாசுகள் வெடிக்காத கிராமத்தை கூகுள் மேப்பில் தான் போய் தேடி பார்த்தாலும் கண்டுபிடிப்பது கடினம் ஆகும்.. மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது கலாச்சாரமாக தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை தான் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அனைத்து வீடுகளிலும் மக்கள் புத்தாடை உடுத்தி, விளக்கு ஏற்றி, பட்டாசு வெடித்து, சொந்த பந்தங்களுடன் ஒன்று கூடி மகிழ்ந்து தீபாளியை கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத கிராமம் என்பது விரல் விட்டு எண்ணிவிடலாம்.. அப்படி ஒரு கிராமம் கோவை சூலூர் அருகே இருக்கிறது.. பறவைகள் சத்தம் கேட்க வேண்டும் என்பதற்காக 20 வருடங்களாக பட்டாசு வெடிக்காமல் இருக்கிறார்கள்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கிட்டாம்பாளையம் கிராமத்தில் நாவல் மரம், அத்தி மரம், புளிய மரம் என 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர். குறிப்பாக 5 ஆயிரம் நாவல் மரங்களை நட்டுள்ளனர்.. வவ்வால் உள்பட பல்வேறு பறவைகளுக்கு உணவாக இந்த மரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக நட்டுள்ளனர்.. அந்த வனத்திற்கு சுதந்திர வனம் என்று பெயரும் இட்டுள்ளனர்..
இதுபற்றி கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் விஎம்ஜி சந்திரசேகர் கூறுகையில், எங்கள் கிட்டாம்பாளையம் கிராமத்தில் 450க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.. இந்த கிராமத்தில் சிறப்பு என்னவென்றால், 1000க்கும் மேற்பட்ட வவ்வால்கள், நாரைகள், கொக்கு, பறவைகள் இங்கே தங்குகின்றன. சாயந்திரம் ஆனால் கொக்கு நாரை இந்த மாதிரி பறவைவகள் வந்துவிடும். பகலில் வவ்வால்கள் இருக்கும்.. இந்த பறவைகளுக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக
20 வருடங்களாக இந்த கிராமத்தில் யாருமே பட்டாசு வெடிப்பது இல்லை.. இந்த ஊருக்கு எந்த அரசியல் கட்சி தலைவர் வந்தாலும் பட்டாசு வெடிக்காமல், துண்டு அல்லது சால்வை கொடுத்து தான் வரவேற்போம். குழந்தைகள் உள்பட யாருமே பட்டாசு வெடிக்காமல் இதை பின்பற்றுகிறார்கள்.. ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து வவ்வால்களை பாதுகாக்கின்றோம். இங்குள்ள சிறுவர்கள் பட்டாசு வெடித்தால், வவ்வால் போய்விடும் என்று நினைப்பதால் அவர்களும் பட்டாசு வெடிப்பது இல்லை.
இரவு 6 மணி முதல் 7.30 மணி வரை வவ்வால்கள் போவதும், பறவைகள் உள்ளே வருவதுமாக இருக்கும். அப்போது அதிகமான சத்தம் கேட்கும். வீட்டிற்கு வெளியில் நின்று பேசினால் கேட்க கூட முடியாது. பறவைகள் சத்தம் மட்டுமே இந்த ஊரில் கேட்கும். அதன்பிறகு சரியாகிவிடும்..
மாலை நேரத்தில் பார்த்தால் பறவைகள் பறப்பதை பார்க்க முடியும். இந்த வவ்வால்களுக்கு வாழ்வாதாரமாக 6000 மரங்களை நட்டுள்ளோம். அது ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அத்தி மரம், புளிய மரமும் நட்டுள்ளோம். இரண்டு வருடத்தில் வவ்வால்களுக்கு தேவையான உணவு எங்கள் ஊராட்சியிலேயே கிடைத்துவிடும். வவ்வால்களின் இனப்பெருக்கமும் அதிகமாகிவிடும்" இவ்வாறு கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் விஎம்ஜி சந்திரசேகர் கூறினார்.












Click it and Unblock the Notifications