டிக்டாக் வீடியோ வெளியிட்ட மனைவி கொடூரமாக கொலை.. கோவையில் சந்தேகக் கணவன் வெறிச்செயல்
கோவை: கோவை குளத்துப்பாளையத்தில் டிக்டாக்கில் அதிகமாக வீடியோக்களை வெளியிட்டு வந்த மனைவியை சந்தேகப்பட்டு கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் அந்த பகுதியில் சென்ட்ரிங் வேலைகளை செய்து வந்தார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 11வயதில் காவ்யா என்ற மகளும், அஷ்வின் என்ற 5வயது மகனும் இருக்கிறார்கள்.

இதனிடையே நந்தினியும் கனகராஜும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தனியாக வசித்து வந்துள்ளார்கள். நந்தினி அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். நந்தினி டிக்டாக்கில் அதிகமான வீடியோக்களை வெளியிட்டு வந்தாராம். இது தொடர்பாக நந்தினிக்கும் கனகராஜ்க்கும் ஒன்றாக வசித்த போதே பிரச்னை வந்துள்ளது.
இதனிடையே நந்தினி யாருடனோ அடிக்கடி தொலைப்பேசியில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்திலும் கனகராஜ்க்கும் நந்தினிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் கனகராஜ் நந்தினிக்கு செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் போன் பிஸியாகவே இருந்ததாம்.இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ், நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கே சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியை அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தினி உயிரிழந்தார். இதையடுத்து மதுக்கரை போலீசார் நந்தினியின் கணவர் கனகராஜை கைது செய்தனர்.
டிக் டாக் வீடியா மற்றும் கணவனின் சந்தேக புத்தியின் காரணமாக ஒரு குடும்பம் முற்றிலும் இப்போது சிதைந்து போய் உள்ளது. மனைவி இறந்து போய்விட்டார் கணவர் சிறைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள இருவரின் நிலையை இருவரும் நினைத்து பார்க்காதது தான் இந்த கொடூரத்தின் சோகம்.












Click it and Unblock the Notifications