கோவையில் முதலில் இந்த 2 இடத்தில்தான் மெட்ரோ - எம்பி கணபதி ராஜ்குமார் கொடுத்த அப்டேட்
கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கான சர்வே 2 இடங்களில் நடைபெற்று வருவதாகவும், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு நிலத்தை ஒப்படைத்த பின்பும் விமான நிலைய விரிவாக்க பணிகள் மெதுவாக நடைபெறுகின்றது எனவும், இது தொடர்பாக விமானநிலைய ஆணையர் மற்றும் அமைச்சரை சந்திக்க இருக்கின்றோம் என கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கோவையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது: கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சேலம் கோட்ட ரயில்வே மேலாளரும் ரயில் நிலையத்தை ஆய்வு செய்துள்ளார்.

கோவை ரயில் நிலையத்தை பொறுத்தவரை போத்தனூர், வடகோவை மேம்படுத்தப்பட்டு மூன்று இடங்களும் பயன்படுத்தப்படும். வடகோவை, போத்தனூரில் இருந்து கிளம்பும் வகையில் ரயில்கள் இயக்க வேண்டும் என சேலம் கோட்ட மேலாளரிடம் வலியுறுத்தியுள்ளோம். தினசரி கோவை பெங்களூர் இரவு ரயில், ராமேஸ்வரம் ரயில், ஈரோடு சேலம் மெமு ரயில் போன்றவை இயக்கப்பட வேண்டும் என கேட்டு இருக்கின்றோம்
கோவையில் இருந்து வேளாங்கண்ணி வரைக்கும் ரயில்கள் நீடிக்க கோரியிருக்கின்றோம். தனியார் பங்களிப்புடன் கோவை ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும் என சேலம் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். வடகோவை மேம்பாலம் பிப்ரவரி மாதம் தயாராகிவிடும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் மெட்ரோ ரயில் செயல்படுத்தவுள்ள 3 வழித்தடங்களில், முதல்கட்டமாக செயல்படுத்தபட இருக்கும் உக்கடம் - நீலாம்பூர், ஐங்சன் - வலையாம்பாளயம் ஆகிய இரு வழிதடங்களில் சர்வே பணிகள் நடைபெற இருக்கின்றது. சத்தியமங்கலம் சாலையில் 1.4 கிலோ மீட்டர் சாலை அகலப்படுத்தபட்டு நடுவில் மெட்ரோ ரயில் நிலையம் வருகின்றது.
மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. வடகோவை கூட்ஷெட் டெப்போவை வேறு பகுதிக்கு மாற்றித் தர வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டு இருக்கின்றோம். கோவை விமான நிலையத்திற்கு ஒரு இயக்குனரை இன்னும் நியமிக்காமல், ஒரு வருடமாக அந்த பணியிடம் காலியாக இருக்கின்றது.
விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக தமிழக அரசு நிலத்தை முழுமையாக ஒப்படைத்து விட்டது. எனினும் விமான நிலைய விரிவாக்க பணிகளானது மிக மெதுவாக நடைபெறுகின்றது. இது தொடர்பாக விமான நிலைய ஆணையர் மற்றும் விமானத் துறை அமைச்சரை சந்திக்க இருக்கின்றோம் என கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தெரிவித்தார் .












Click it and Unblock the Notifications