தாத்தா செய்யற காரியமா இது.. கோவை அருக்காணி பாட்டிக்கு நடந்த சோகம்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக, நாம் தமிழர், பாஜக, தவெக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை மருந்து பயன்படுத்துதல், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. விருதுநகர் இரட்டை கொலை, திருச்சி இளைஞர் கொலை என்று கடந்த சில நாட்களில் பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கோவையில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் ஒரு முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.
கோவை மாவட்டத்திலும் கொலை சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. தடாகம் அருகே கடந்த வாரம் மது குடிக்கும் பஞ்சாயத்தில் இளைஞர் கொலை, மேட்டுப்பாளையம் ஓட்டுநர் கொலை, பன்னிமடை பகுதியில் வீட்டில் புகுந்து கொலை செய்யப்பட்ட பெண் என்று ஏராளமான கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இத்தனை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

மூதாட்டி கொலை
இந்நிலையில் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே வளையபாளைம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணி. 80 வயதான அருக்காணி அம்மாள் தனியாகி வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக அருக்காணி வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. நேற்று அவர் வீட்டில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வந்துள்ளதால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தபோது அருக்காணி இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கப்பட்டது. அருக்காணிக்கு கருப்பசாமி என்பவருடன் திருமணமாகி 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இருந்தாலும் அவர் தனியாக தான் வசித்து வந்துள்ளார். அவ்வபோது மட்டும் வாரிசுகள் வந்து பார்த்து செல்வார்கள்.
முதியவர் கைது
காவல்துறை விசாரணையில் அருக்காணி அம்மாள் வீட்டின் அருகே வசித்து வரும் கோபால் (வயது 65) என்பவர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அருக்காணி அணிந்திருந்த தங்க மோதிரத்துக்காக கோபால் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கோபாலை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு பவுன் தங்க மோதிரத்தை மீட்டனர். இந்த சம்பவம் கருமத்தம்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications