வாக்குப் பதிவு- காரில் கட்சி கொடி, தோளில் அதிமுக துண்டு.. எஸ்.பி. வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு!
கோவை: தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது தேர்தல் விதிகளை மீறியதாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று பொதுவாக அமைதியாக நடைபெற்றது. ஒருசில இடங்களில்தான் புகார்கள் எழுந்தன.
அதேபோல் கள்ள ஓட்டுப் புகார்கள், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது உள்ளிட்ட பிரச்சனைகளும் எழுந்தன. வேட்பாளர்கள் கட்சி சின்னங்களை அணிந்து சென்றதாக பலர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
கோவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காரில் கட்சி கொடியுடன் வாக்களிக்க வருகை தந்தார். அதேபோல் தோளில் அதிமுக துண்டு அணிந்திருந்தார். இதனால் வேலுமணி மீது திமுகவினர் போலீசில் புகார் கூறினர்.
இதனையடுத்து கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் எஸ்.பி. வேலுமணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.