"கோவையின் அடையாளம்.." திடீரென முக்கிய சாலையில் நடந்த மாற்றம்.. பிஎஸ்ஜி அருகே இதை கவனிச்சீங்களா
கோவை: கோவை நகரின் முக்கியமான கல்லூரி என்றால் அது பிஎஸ்ஜி கல்லூரி. இந்த கல்லூரியில் இருந்த இரும்பு நடை மேம்பாலம் கோவையின் அடையாளமாகத் திகழ்ந்த நிலையில், அது சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. இதற்கிடையே அந்த நடை மேம்பாலம் இப்போது மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
எப்போதும் ஒவ்வொரு ஊருக்கும் தனியாக ஒரு அடையாளம் இருக்கும். அந்த ஊருக்கே அதுதான் ஐக்கானிக் இடமாக இருக்கும். நம்ம சென்னைக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் இருப்பது போல...

இதுபோலத் தான் கோவையின் அடையாளமாக இருந்தது பிஎஸ்ஜி ஸ்கைவாக். கோவை என்றாலே பலருக்கும் இந்த ஐக்கானிக் நடை மேம்பாலம் தான் நினைவுக்கு வரும்.
கோவை ஐக்கானிக் மேம்பாலம்: கோவையின் முக்கிய கல்லூரியான பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் சாலையைக் கடக்கப் பயன்படுத்திய இந்த ஐக்கானிக் நடை மேம்பாலத்தைக் கடந்த மார்ச் மாதம் அதிகாரிகள் இடித்து அகற்றினர். அவினாசி சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், அதற்காகவே இந்த மேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக மாணவர்கள் வசதிக்காக அங்கே புதிதாக சிக்னலை ஏற்படுத்தினர். இது மாணவர்கள் சாலையைக் கடக்கப் பயன்பட்டது.

இருப்பினும், சிக்னல் என்பது மேம்பாலம் அளவுக்குச் சவுகரியமாக இல்லை என்றே பலரும் கூறினர். மேலும், அந்த மேம்பாலம் என்பது வெறுமன சாலையைக் கடக்கப் பயன்படும் பாலம் மட்டும் இல்லை. அது பிஎஸ்ஜி கல்லூரி மாணவ மாணவிகளுடன் எமோஷ்னலாகவே கனெக்ட் ஆகி இருந்தது. இதனால் பலரும் அந்த மேம்பாலத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என வலியுறுத்தினர்.
மீண்டும் ஸ்கைவாக்: அதேநேரம் அப்போதே ஸ்கைவாக் அகற்றப்பட்டது தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். குறிப்பிட்ட அந்த இடத்தில் மேம்பாலப் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் ஸ்கைவாக் நிறுவப்படும் என்று கூறியிருந்தனர்.. இதற்கான அனுமதியை பிஎஸ்ஜி கல்லூரி நிறுவனம் முன்கூட்டியே பெற்று இருந்தது. அதன்படியே இப்போது மீண்டும் ஸ்கைவாக் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மேம்பாலம் இருப்பதால் முன்பு இருந்த உயரத்தை விட குறைந்த உயரத்திலேயே ஸ்கைவாக் அமைக்கப்பட்டுள்ளது.
என்ன மேம்பாலம்: அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10 கிமீ தூரத்திற்கு 1,621 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதற்காகவே இந்த ஸ்கைவாக் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 306 தூண்கள் கொண்ட அந்த மேம்பாலம் பல இடங்களில் ஏறும் மற்றும் இறங்கும் லேன்களை கொண்டதாக இருக்கிறது. இது கோவை நகரின் டிராபிக்கை வெகுவாக குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020 டிசம்பரில் இந்த மேம்பாலத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்தாண்டு கட்டுமான பணிகள் நிறைவடையும் எனத் தெரிகிறது.
கடந்த 2007ல் பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜியின் சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள் இந்த ஸ்கைவாக்கை கட்டினர். 2003இல் முதலில் கான்கிரீட் மூலம் ஸ்கைவாக்கை கட்ட திட்டமிட்டனர். இருப்பினும், டிசைன் பிரச்சினைகளால் அந்த ஸ்கைவாக் திட்டம் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக இரும்பு மேம்பாலத்தைக் கட்டினர். கடந்த மார்ச் மாதம் அந்த இரும்பு ஸ்கைவாக் அகற்றப்பட்ட நிலையில், இப்போது புதிய மேம்பாலம் நிறுவப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications