உயிரே.. தப்பிச்சு எப்படியாச்சு ஓடிரு.. போலீஸை கண்டு மேம்பாலத்தில் இருந்து குதித்த கோவை ரவுடி
கோவை: சிறுவாணி தண்ணீர், கொங்கு தமிழ் என்று அமைதியான அடையாளத்துடன் இருந்த கோவை சமீபகாலமாக, லோகேஷ் கனகராஜ் படத்தைப் போல ரவுடிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதனால் முக்கிய ரவுடிகளை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பிரபல ரவுடி ஒருவர் போலீஸை கண்டதும் மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவருக்கு என்ன ஆனது என தெரிந்து கொள்ள செய்தியை தொடர்ந்து வாசியுங்கள்.
கோவை சிட்டியில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடந்தன. அதில் ஒரு கொலை சம்பவம் பட்டப்பகலில் கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராக வந்த கோகுல் என்ற ரவுடியை சுற்றுப் போட்டு சரமாரியாக வெட்டிக் கொன்றது ஒரு கும்பல். கோவை ரவுடிகளின் கோர முகத்தை வெளிக்கொண்டு வந்ததில் அந்த சம்பவமும் ஒன்று. இதன் பின்னணியில் போதை மருந்து விற்பனை செய்யும் நெட்வொர்க், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளுக்குள் இருக்கும் முன்பகை ஆகியவை வெட்ட வெளிச்சமானது. கோகுல் கொலையே, அதற்கு முன்பு நடந்த மற்றொரு கொலைக்கு பழிவாங்க போடப்பட்ட பக்கா ஸ்கெட்ச் ஆகும்.

கோகுல் கொலை சம்பவத்துக்கு பிறகு சுதாரித்துக் கொண்ட காவல்துறை போதை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடபட்ட ரவுடிகளை கைது செய்து அதிரடி காட்டியது. 'பிரகா பிரதர்ஸ்' என்ற மோஸ்ட் வான்டட் கும்பலில் இருந்த அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த சுஜி மோகன் என்ற ரவுடியும் ஒருவர். அவர் கொலை, போதை மருந்து விற்பனை உள்ளிட்ட 11 வழக்குகளுடன் கோவையின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில், போதை மருந்து வழக்கு ஒன்றில் கோவை மத்திய சிறையில் இருந்த சுஜி மோகன், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்துள்ளார். வெளியில் வந்தவுடனே மீண்டும் வேலையை காட்ட தொடங்கினார். போலீஸ் தகவல்படி, சுஜி மோகன் நீலிக்கோணம்பாளையம் பகுதி பேருந்து நிறுத்தம் அருகே கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். கணேசன் பணம் கொடுக்க மறுக்கவே, சுஜி மோகன் கத்திமுனையில் கணேசனிடம் இருந்த பணம், செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதுதொடர்பாக கணேசன் சிங்காநல்லூர் போலீஸில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீஸ் சுஜி மோகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே போலீஸ் வாகனம் கணபதி டெக்ஸ்டூல் பாலத்தின் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுஜி மோகன் அங்கு நின்று கொண்டிருந்துள்ளார். போலீஸ் வாகனத்தை பார்த்தவுடன், அவர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். இதில் அவரின் இரண்டு கால்களின் எலும்புகளும் முறிந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸ் அவரைப் பிடித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications