கோவை செம்மொழி பூங்காவை ஆர்வத்துடன் ரசிக்கும் பொதுமக்கள்.. சூப்பர் வசதிகள்.. நுழைவு கட்டணம் எவ்வளவு?
கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இன்று ஆர்வமுடன் புதிய பூங்காவை கண்டுகளித்து வருகின்றனர். காலை 6 முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த நவம்பர் 25 ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகளை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் நடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரி கமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் இந்தப் பூங்காவில் அமைக்கப் பட்டுள்ளன.
இந்தப் பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் அமைந்துள்ளது. அனுபவ மையக் கட்டடம், 500 நபர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரத்தியேக விளையாட்டுத் திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் QR CODE பயன்படுத்தியும், இந்த தோட்டங்களில் உள்ள மரம் மற்றும் செடி வகைகளை பற்றி தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செம்மொழிப் பூங்கா முழுவதும் இரவில் ஜொலிக்கும் வண்ணம் அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், பொதுமக்கள் நடை பயிற்சி செய்வதற்கு கால் வலி ஏற்படாத வகையில் பிரத்தியேகமான முறையில் மண் அடுக்குகளால் அமைக்கப்பட்ட நடைபாதை, தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், மின்சார வாகனங்கள். உணவகம், ஒப்பனை அறை, பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து மகிழ, பல்வேறு இடங்களில் செல்ஃபி பாயிண்ட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் சில பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்காவை இன்று (டிசம்பர் 11) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிப்பு வெளியானது. பொதுமக்கள் இன்று ஆர்வமுடன் புதிய செம்மொழி பூங்காவை கண்டுகளித்து வருகின்றனர். செம்மொழி பூங்கா காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்கும்.
பூங்காவை பார்வையிட 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.15 நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. செம்மொழி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள மாதந்திரக்கட்டணம் ரூ.100, குறும்படம் எடுக்க நாளொன்றுக்கு ரூ.2,000, திரைப்பட சூட்டிங்கிற்கு நாளொன்றுக்கு ரூ.25,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications