கல்லூரி மாணவர்களை குறி வைத்து செயின் பறிப்பு.. சிக்கிய கோவை பாஜக நிர்வாகி
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை பொருள், வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. அமைதியான ஊர் என்று பெயரெடுத்த கோவையும் அதற்கு விதிவிலக்கில்லை. கோவையில் சமீபகாலமாக ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. கோவையில் கொள்ளையர்களுக்கு உதவி செய்து வந்த பாஜக நிர்வாகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் அபினேஷ் என்பவர் படித்து வருகிறார். 21 வயதாகும் அபினேஷ் பொள்ளாச்சியைச் சேர்ந்தவராவார். அபினேஷை கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி, அவரின் நண்பரான விக்னேஷ் தொடர்பு கொண்டு சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அவர் சென்றுள்ளார்.

கத்தி முனையில் செயின் பறிப்பு
அங்கு விக்னேஷ் மற்றும் அவரின் நண்பரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வேஷ் இருந்தனர். அபினேஷ்க்கு சர்வேஷை ஏற்கனவே தெரியும். அபினேஷ் அங்கு சென்றவுடன் அந்த இருவரும், அவரை காருக்குள் இழுத்து தள்ளி வேகமாக சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள் க.க சாவடி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு விக்னேஷ் மற்றும் சர்வேஷ் ஆகியோர் கத்திமுனையில் அபினேஷை மிரட்டியுள்ளனர்.
அவரின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க செயினை கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அவர்கள் செயினை பறித்து அபினேஷை அந்தப் பகுதியில் விட்டு தப்பித்துள்ளனர். அங்கிருந்து மீண்டு வந்த அபினேஷ், அதே நாளில் இந்த சம்பவம் தொடர்பாக க.க சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர்.
பாஜக நிர்வாகி கைது
தேனியில் தலைமறைவாக இருந்த சர்வேஷை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஆர்எஸ்புரம் பகுதியில் உள்ள விவேக் என்கிற பாஜக நிர்வாகி இதன் பின்னணியில் இருப்பது கண்டறியப்பட்டது. பாஜக மாநில பட்டியலின அணியின் செயற்குழு உறுப்பினராக விவேக் இருப்பது கண்டறியப்பட்டது.
காவல்துறையில் சர்வேஷ் அளித்த வாக்குமூலத்தில், "கொள்ளையடிப்பதற்கு விவேக் தான் கார் கொடுத்து உதவினார். பொதுவாக கொள்ளை சம்பவங்களுக்கு அவரின் காரையே பயன்படுத்த சொல்வார். நாங்கள் கொள்ளையடிக்கும் தங்க நகைகளையும் விவேக்கிடம் வழங்கிவிடுவோம்" என்று கூறியுள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் விவேக்கை கைது செய்துள்ளனர். இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications