"வேணாம் பிலிப்ஸே".. கட்டிங்குக்காக முதல் நாளே நண்பனைக் கொன்ற கோவை போதை ஆசாமி
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை பொருள் பழக்கம், பாலியல் வன்கொடுமைகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை அருகே இரண்டு பேர் மது அருந்தும்போது நண்பர்களாகியுள்ளனர். அடுத்தடுத்து சரக்குக்காக அவர்கள் தங்கள் நட்பை சிறிது நேரம் தொடர்ந்துள்ளனர். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. போதையில் தனது கட்டிங்கையும் சேர்த்து குடித்துவிட்டதாக கூறி நண்பரை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கோவை கணுவாய் அருகே உள்ள சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் (36). ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2 ஆம் தேதி கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் டாஸ்மாக்கில் மது அருந்திக் கொண்டிருந்தார். அங்கு அவருக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (42) என்பவர் அறிமுகமாகியுள்ளார். சரவணன் கவுண்டம்பாளையத்தில் தங்கி ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கட்டிங் நண்பர்கள்
இருவரும் மது அருந்தியபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராகவன், நீ என்னுடன் தடாகம் பகுதிக்கு வந்தால் என் மாமாவிடம் பணம் வாங்கி சரக்கு மற்றும் சாப்பாடு வாங்கி தருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் தடாகம் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றதும் ராகவன், என் மாமா இப்போது வந்துவிடுவார். அதுவரை நாம் ஒரு குவாட்டர் வாங்கி ஆளுக்கு ஒரு கட்டிங் அடிப்போம், வந்தவுடன் நான் வாங்கித் தருகிறேன் என்று சொல்லியுள்ளார்.
சரவணனும் ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கியுள்ளார். அதில் இருந்த ஒரு பாதியை முதலில் ராகவன் குடித்துள்ளார். சரவணன் சிகரெட் வாங்கி வந்து மது குடிக்கலாம் என்று சிகரெட் வாங்க சென்றுள்ளார். அதற்குள் ராகவன் அந்த கட்டிங்கையும் குடித்துள்ளார். சிகரெட் வாங்கி வந்த பிறகு, ராகவன் தன் பங்கு சரக்கையும் அடித்திருப்பதை பார்த்து சரவணன் ஆத்திரமடைந்துள்ளார். ஆத்திரத்தில் அவர் பாட்டிலை எடுத்து ராகவனின் தலையில் அடித்துள்ளார்.
கொலையில் முடிந்த சோகம்
இதில் ராகவன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். சரவணன் தொடர்ந்து அருகில் இருந்த ஒரு செங்கலை எடுத்து ராகவன் தலையில் பலமாக அடித்துள்ளார். அதன் பிறகு அவர் பேருந்து மூலம் கவுண்டம்பாளையம் சென்றுள்ளார். ஆனால் ராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ராகவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சரவணன் தான் ராகவனை கொலை செய்தார் என்பதை கண்டறிந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தடாகம் காவல்துறையினர், கவுண்டம்பாளையம் பகுதி சென்று சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications