கோவை சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு அதிரடியாக சஸ்பெண்ட்.. விசாரித்தால் மிகப்பெரிய வில்லங்கம்
கோவை: கோவை அருகே பல கோடி ரூபாய் செங்காந்தள் மலர் விதைகள் திருட்டு போன விவகாரத்தில் கைதானவர்களிடம் பறிமுதல் செய்த பணத்தை சுமார் ரூ.30 லட்சம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சிங்கநல்லூரை ஒட்டியுள்ள ஒரு குடோனில் செங்காந்தள் மலர் விதைகள் அடிக்கடி திருடு போனதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக அந்த குடோன் உரிமையாளர் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட சிலரை பிடித்து, அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர். அதில் அங்கு பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் யூசூப், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் சேர்ந்து லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்து விட்டு, கைதானவர்களிடம் இருந்து மீட்ட பணத்தை குறைவாக கணக்கு காட்டியதாக கோவை மாநகர கமிஷனருக்கு ரகசியமாக புகார்கள் பறந்தது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், முதற்கட்டமாக அவர்கள் 2 பேரும் கோவை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் சப்-இன்ஸ்பெக்டர் யூசுப், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர், திருட்டு வழக்கில் கைதானவர்களிடம் இருந்து மீட்ட பணத்தில் ரூ.30 லட்சம் வரை கையாடல் செய்ததும், அந்த பணத்தை குறைத்து கணக்கு காட்டி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதை தொடர்ந்து அந்த பணத்தை 2 பேரிடம் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
இந்த விசாரணை அறிக்கையை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் உயர் அதிகாரிகள் அண்மையில் சமர்ப்பித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் யூசுப், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பணம் கையாடல் விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்த சம்பவம் கோவை மாநகர போலீஸ் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications