கமல் வேட்பாளர் என்பதற்காக நடிகை ஸ்ருதிஹாசன் வாக்குச் சாவடிக்குள் எப்படி வரலாம்? பாஜக பரபர புகார்
கோவை: கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாக்குச் சாவடிகளை பார்வையிட்ட அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன் மீது தேர்தல் விதிமீறல் புகார் கொடுத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.
கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் வெல்லப் போவது யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வாக்குப் பதிவு நடைபெற்ற நேற்று வானதி சீனிவாசன் தரப்பு மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டன.

வானதி சீனிவாசன் மீது புகார்
வாக்காளர்களுக்கு பணத்துக்கு பதில் வானதி சீனிவாசன் தரப்பு டோக்கன் கொடுத்தது. இப்படி டோக்கன் கொடுத்தவர்களை திமுக கூட்டணியினர் போலீசில் பிடித்து கொடுத்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
Recommended Video

கோவையில் கமல்
இதனிடையே சென்னையில் நேற்று வாக்களித்த கையோடு கமல்ஹாசன் கோவை சென்றடைந்தார். அவருடன் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனும் கோவை சென்றார். கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாக்குச் சாவடியாக கமல்ஹாசன் சென்று பார்வையிட்டார்.

வாக்குச் சாவடிகளில் ஸ்ருதி
அவருடன் ஸ்ருதிஹாசனும் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குள்ளும் ஹாயாக சென்று பார்வையிட்டு வந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வாக்குச் சாவடிக்குள் வேட்பாளர் மட்டும்தான் அனுமதிக்கப்பட வேண்டும்; அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை எப்படி அனுமதிக்க முடியும? என கொந்தளித்தது பாஜக.

ஸ்ருதிஹாசன் மீது புகார்
இப்போது இதையே புகாராக கொடுத்திருக்கிறது பாஜக. அதாவது வேட்பாளர் அல்லாத நடிகை ஸ்ருதி ஹாசன், வாக்குச் சாவடிக்குள் சென்று பார்வையிட்டது தேர்தல் விதிமுறைகள் மீறல்; ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என புகார் கொடுத்திருக்கிறது பாஜக.












Click it and Unblock the Notifications