அப்படியே வேற மாதிரி மாறப்போகும் வடகோவை மேம்பாலம்.. பக்காவான பிளானில் சீரமைப்பு
கோவை: கோவை வடகோவை மேம்பாலத்தை நாள் தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். நகரத்தின் மையப் பகுதியில் உள்ள அந்த மேம்பாலம் கட்டப்பட்டு 35 வருடங்களாகிவிட்டன. கோவையின் முக்கிய வணிக பகுதியாக இருப்பதால் வடகோவை மேம்பாலத்தை சீரமைத்தால் போக்குவரத்திற்கு எளிமையாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் வடகோவை மேம்பாலத்தை ரூ.12 கோடியில் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதததால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. முக்கியமாக கோவை மாநகரின் மக்கள் தொகை மட்டுமே 30 லட்சத்தை கடந்துள்ளது. தினசரி மற்ற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

வடகோவை மேம்பாலம்
இதன் காரணமாக மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதை சரி செய்வதற்காக முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அந்த வகையில் கோவை மாநகரில் ஏற்கனவே உக்கடம் மேம்பாலம், அவிநாசி சாலை மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், கணபதி டெக்ஸ்டூல் பாலம். வடகோவை மேம்பாலம் உள்ளிட்டவை உள்ளன. சாய்பாபா காலனி பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
காந்திபுரத்தில் இருந்து ஆர்எஸ்புரம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாக வடகோவை மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டு சுமார் 35 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த மேம்பாலத்தை மாநில நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி பிரிவினர் கடந்த வருடம் ஆய்வு செய்தனர். ஆங்காங்கே விரிசல்கள், மழை நீர் தேங்குவதால் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்தனர்.
சீரமைப்புப் பணி
அவற்றை சரி செய்வதற்காக மேம்பாலத்தின் உறுதித்தன்மையை மேம்படுத்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் வட கோவை மேம்பாலத்தை சீரமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. அதன்படி வட கோவை மேம்பாலத்தை சீரமைக்க ரூ.12 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது நிதித்துறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "வடகோவை மேம்பாலத்தில் தூண் மற்றும் சிலாப்கள் இடையே பொருத்தக்படும் பேரிங் உள்ளிட்ட உபகரணங்கள் மாற்றப்படவுள்ளன. அதனுடன் ஓடு தளத்தை மேம்படுத்துதல், விரிசல் ஏற்பட்ட இடங்களை சீரமைப்பது, மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற மோட்டார் அமைப்பது, வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
விரைவில் தொடக்கம்
மக்கள் போக்குவரத்திற்கு தொந்தரவு இல்லாமல் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 3 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் வடகோவை மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கும்" என்றனர். இந்த தகவல் கோவை மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications