உன்ன நம்புனேன் பாரு.. கூகுள்மேப்பால் குரூப் 1 தேர்வு எழுதாத கோவை பெண்..காலதாமதத்தால் அனுமதி மறுப்பு
கோவை: கோவையில் கூகுள் மேப் மூலம் தேர்வு மையம் அமைக்கப்பட்ட பள்ளிக்கு 5 நிமிடம் தாமதமாக சென்ற நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத முடியாத நிலைக்கு பெண் தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ் குரூப் 1 தேர்வு நடந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டில் சப் கலெக்டர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்க பதிவாளர், உதவி ஆணையர், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என மொத்தம் 92 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். திட்டமிட்டபடி நேற்று காலையில் குரூப் 1 தேர்வு நடைபெற்றது.
1,31,457 பேர் குரூப் 1 தேர்வெழுத வரவில்லை! 3,22,414 பேர் விண்ணப்பித்தும் பாதிக்கு பாதி ஆப்சென்ட்!
குரூப் 1 தேர்வு
குரூப் 1 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கி மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,31,457 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். இது விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது ஏறக்குறைய 50 சதவீதத்தை தொட்டுள்ளது.
தேர்வு எழுத அனுமதியில்லை
குறிப்பாக தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுதி அனுமதிக்கப்படவில்லை. தேர்வு காலை 9.30 மணிக்கு துவங்கிய நிலையில் தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கே வர வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் 9 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில் மாநிலம் முழுவதும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு நிமிடம் முதல் சற்று காலதாமதமாக வந்தவர்கள் கெஞ்சியும் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.
கோவை பெண்
இந்நிலையில் தான் கூகுள் மேப்பால் கோயம்புத்தூரில் பெண் ஒருவர் குரூப் 1 தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவரம் வெளியாகி உள்ளது. அதாவது கோவை வடள்ளி பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் கடந்த குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வந்தார். இவருக்கு பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஐஸ்வர்யாவுக்கு அந்த பள்ளி தெரியாது. இதனால் அவர் கூகுள் மேப் உதவியை நாடினார்.
குழப்பிய கூகுள் மேப்
இதையடுத்து கூகுள் மேப்பில் பள்ளியின் பெயரை டைப் செய்து அது காட்டிய வழியில் சென்றார். கூகுள் மேப் காட்டிய இடத்தில் பள்ளி இல்லாத நிலையில் ஐஸ்வர்யா சில பகுதிகளில் சுற்றிய நிலையில் பொதுமக்களிடம் கேட்டு இறுதியாக தேர்வு மையம் உள்ள பள்ளியை கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் தேர்வு எழுத செல்லும்போது அதிகாரிகள் உள்ளே விட மறுத்தள்ளனர். தேர்வு மையத்துக்கு அவர் 5 நிமிடம் தாமதமாக சென்றதால் அனுமதிக்கப்பவில்லை. இதனால் அவர் மனம் உடைந்தார்.
தேர்வு எழுதாத பெண் சொல்வது என்ன?
இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், ‛‛2019ல் இருந்து குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வந்தேன். தேர்வுக்காக காலை 8.30 மணிக்கு மையத்தில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 9 மணிக்காவது வந்திருக்க வேண்டும். எனக்கான தேர்வு மைய பள்ளியின் கூகுள்மேப் லோக்கேஷன் தவறாக காட்டியது. இதனால் 5 நிமிடம் வரை தவறாக தேர்வு மையத்துக்கு வந்தேன். என்னை அனுமதிக்கவில்லை. என்னைபோல் தாமதமாக வந்த 20 பேரையும் அனுமதிக்கவில்லை. கலெக்டர் அலுவலத்துக்கு போன் செய்தேன். தாசில்தாரை அனுப்பினார்கள். அவர்கள் கூகுள் மேப்பை பார்த்து யார் வர சொன்னார்கள்? என்றனர். இதனால் தேர்வு எழுத முடியவில்லை'' என்றார்.