இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை
சென்னை: இசக்கி சுப்பையா ராஜினாமா செய்யவும், கூடுதல் பரபரப்பு தமிழக அரசியலில் தொற்றிக் கொண்டுள்ளது.. இதனால் அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் எம்.எல்.ஏக்களின் தொடர் ராஜினாமாவால் விஸ்வரூபம் எடுத்துள்ளன.. எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் வரிசையாகத் தவெகவில் இணைந்து வருவது, எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்கிவிட்டுள்ளது...!!
அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி செய்கிறார், வாய்ப்பிருந்தால் முதலமைச்சரை சந்திப்பேன்.. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, அதனால் நான் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேனா என்பது பற்றி தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.

ஆக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதிமுக கட்சிக்குள் நீண்டகாலமாக புகைந்துகொண்டிருந்த உட்கட்சி மோதல் பகிரங்கமாக இப்போது வெளிவர துவங்கி உள்ளது-
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் சி.வி.சண்முகம் ஆதரவு அணியினருக்கும் இடையே கடும் முரண்பாடுகள் உருவாயின.. கட்சியின் எதிர்காலம் மற்றும் தலைமை குறித்து இரு தரப்பினரும் நேரடியாகவே மோதிக்கொண்டனர்.
இந்த நிலையில், சண்முகம்-வேலுமணி அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.. ஆனால் சில எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அறிவித்து கட்சியிலேயே தொடர்வதாக தெரிவித்தனர்.
நேற்று எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தனர்.. இதனை தொடர்ந்து அவர்கள் தவெகவில் இணைந்து கொண்டனர்.. இந்த நடவடிக்கை, அதிமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது.
ஒரே நாளில் 3 எம்.எல்.ஏக்கள் பதவியை விட்டு வெளியேறியது, அதிமுகவின் கட்சி ஒற்றுமையை மேலும் கேள்விக்குறியாக்கி விட்டு சென்றுள்ளது.. கட்சியின் எம்.எல்.ஏ எண்ணிக்கை குறையும் நிலையில், ஒவ்வொரு வெளியேற்றமும் அதிமுகவிற்கு பெரும் அரசியல் இழப்பாக அமைந்தது..
யார் இந்த இசக்கி சுப்பையா
இப்போது இசக்கி சுப்பையா புயலை கிளப்பி விட்டுள்ளார்.. இசக்கி சுப்பையா பொறுத்தவரை, நெல்லை மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய தூணாக விளங்கியவர்.. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆவுடையப்பனை சுமார் 16,915 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அம்பாசமுத்திரம் தொகுதியை கைப்பற்றியவர்.
அதற்கு முன்னரும் பல முறை அமைச்சர் பதவி வகித்திருக்கிறார்.. 2026 தேர்தலிலும் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. தவெக, நாம் தமிழர், திமுக உள்ளிட்ட பல கட்சிகளுடனான போட்டியிலும் அவர் வெற்றி பெற்றது அவரது பவர்புல் அரசியலை உணர்த்தியுள்ளது..
இப்போது இசக்கி சுப்பையா ராஜினாமா செய்த பிறகு தவெகவில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.. காரணம் அவர் எஸ்.பி. வேலுமணி அணியின் நம்பகமான ஆதரவாளர் என்பதால், நேற்று வெளியேறிய மரகதம், குமரவேல் உள்ளிட்டோரின் படிகளையே இவரும் பின்பற்றுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்து கூறுகிறார்கள்.
அடுத்து தாவும் வேலுமணி ஆதரவாளர்கள்?
அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வெளியேறுவது, தவெக அரசுக்கு சட்டசபையில் பலம் கூட்டும் விஷயமாக அமைந்துள்ளது.. 2026 தேர்தலில் ஏற்கனவே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் போனது அதிமுகவிற்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.. இந்த நிலையில், தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதும் தவெகவில் இணைவதும் கட்சியை மேலும் பலவீனப்படுத்துகிறது.. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்தாலும், அடிப்படை மட்டத்தில் கட்சி சிதைந்துகொண்டே போவதை இந்த நிகழ்வுகள் தெளிவாக காட்டுகின்றன..
அதுமட்டுமல்ல, அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வரிசையாக விலகி வருவது, அந்த அணியின் கட்டுக்கோப்பு குலைந்துவிட்டதையே காட்டுகிறது.. எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் என அறியப்படும் இன்னும் சில மாவட்ட செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளும் அடுத்தகட்டமாக தவெகவில் இணையலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் வலுவாக உள்ளது.
இசக்கி சுப்பையாவை தொடர்ந்து அடுத்து யார்?
முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட எம்.எல்.ஏக்கள் இப்போதே தவெகவின் சமிக்ஞைக்காக காத்திருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. இதனால் வரும் நாட்களில் மேலும் சில அதிரடி விலகல்களை நாம் எதிர்பார்க்கலாம்..
அதிமுகவின் இந்த தொடர் சரிவு, எதிர்காலத்தில் அக்கட்சியை ஒரு வலுவான எதிர்க்கட்சியாகக் கூட நிலைநிறுத்த முடியாமல் போகலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.. எடப்பாடி பழனிசாமி தனது பிடியை இறுக்க முயன்றாலும், தவெகவின் கவர்ச்சிகரமான அரசியல் களமும், ஆளுங்கட்சியின் அதிகாரமும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை ஈர்த்து வருகிறது.
ஒருவேளை இந்த போக்கு நீடித்தால், அதிமுக வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கும் கட்சியாக மாறி, அரசியல் களம் இரு துருவங்களாகவோ அல்லது தவெக மைய அரசியலாகவோ முற்றிலுமாக மாற வாய்ப்புள்ளதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications