‘குடும்பம் முக்கியம் என்பதை நீங்க காட்டணும்’.. பதவியேற்பில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய்க்கு சமுத்திரக்கனி அறிவுரை
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொறுப்பேற்று இன்னும் சில நாட்களே ஆன நிலையில், அவரைச் சுற்றிய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனியின் பேச்சு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சமுத்திரக்கனி, நேரடியாக பெயரை சொல்லாவிட்டாலும், அவரது பேச்சு முழுவதும் முதலமைச்சர் விஜய்யை மையப்படுத்தியதாகவே பலரும் கருதுகின்றனர்.

தேர்தல் முடிவு
நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி, "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சி. நேற்று கூட நாங்கள் மதுரையில் பேசிக்கொண்டிருந்தோம். 150 கோடி ரூபாய் செலவு செய்தது குறித்து பேசினோம். 150 கோடி எதற்காக செலவு செய்வார்கள்? 1500 கோடி எடுப்பதற்காக தானே? ஒரு கட்சி எல்லாம் காணாமலே போய்விட்டது. சல்லடை போல ஆகிவிட்டது" என்று தனது அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இதுவரை அவரது பேச்சு சாதாரண அரசியல் விமர்சனமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் பேசிய வார்த்தைகள்தான் தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
வருத்தப்பட்ட சமுத்திரக்கனி
பதவியேற்பு விழாவை பற்றி பேசும்போது சமுத்திரக்கனி, "பதவியேற்பு விழாவை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போது முதல் வரிசையில் ஒரு மூன்று பேர் மிஸ்ஸிங். அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது" என்று கூறினார்.
இந்த ஒரு வரிதான் சமூக வலைதளங்களில் பல கேள்விகளை கிளப்பியது.
அவர் குறிப்பிட்ட அந்த 'மூன்று பேர்' யார்? ஏன் அதைப் பற்றி அவர் இவ்வளவு உணர்ச்சியுடன் பேசினார்? என்ற கேள்விகள் எழ ஆரம்பித்தன. அதன்பிறகு சமுத்திரக்கனி பேசிய வரிகள் இந்த சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தின.
"உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் வீட்டிற்கே சென்று, அவர்களுடன் கை குலுக்கி, அவர்கள் தோள் மீது கை போட்டு அன்பு செலுத்திய பண்பாளர் நீங்கள். அதனால் அந்த மூன்று பேரை விட்டு விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது தலைவா... விட்டுடாதீங்க" என்று அவர் கூறினார்.
இதைக் கேட்ட பலர், இது சாதாரண அரசியல் கருத்தாக இல்லை; விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கி கூறப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்று பேச ஆரம்பித்தனர்.
குடும்பம் பற்றிய பேச்சால் கிளம்பிய சந்தேகம்
சமுத்திரக்கனி தனது பேச்சை அங்கேயே நிறுத்தவில்லை. "பல கோடி இளைஞர்கள் உங்கள் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு குடும்பம் மிகவும் முக்கியம் என்ற எண்ணம் வர வேண்டும். மனைவி மீதும், பெற்ற பிள்ளைகள் மீதும் பாசமும் பற்றும் இருக்க வேண்டும். அதைப் நீங்கள் உருவாக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இந்த வரிகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் ஒரு கருத்து உருவாகிவிட்டது. அவர் மறைமுகமாக விஜய்யின் மனைவி, மகன், மகளைத்தான் குறிப்பிட்டார் என்று பலரும் கூற ஆரம்பித்தனர்.
திரிஷா இருந்தார்
இந்த விவாதத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நாளில் நடந்த விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்டது அப்போது பெரிய பேச்சாக மாறியது. அதுவும் அவருக்கு முன்வரிசையில் இடம் வழங்கப்பட்டிருந்தது கூட பலரது கவனத்தை ஈர்த்தது.
அந்த காட்சிகளை வைத்து சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துக்கள் வெளியானது. சிலர் அதை சாதாரண நண்பர் உறவாக பார்த்தாலும், சிலர் கடுமையாக விமர்சித்தனர்.
அதனால் தான் இப்போது சமுத்திரக்கனி "மூன்று பேர் மிஸ்ஸிங்" என்று கூறியதும், அது விஜய்யின் குடும்பத்தை நோக்கிதான் என்ற கருத்து பரவி வருகிறது.
விஜயை விமர்சித்த சமுத்திரக்கனி
இது சமுத்திரக்கனி விஜய்யை பற்றி முதன்முறையாக கருத்து கூறுவது இல்லை. ஏற்கனவே விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியபோது கூட சமுத்திரக்கனி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
அப்போது அவர், "இப்ப நல்லபடியா போயிட்டு இருக்கும் நேரத்தில் எதற்காக இப்படி எல்லாம் செய்ய வேண்டும்? மக்கள் உங்களை நம்பி இருக்கிறார்கள். கரூர் விஷயத்தில் 41 பேர் இறந்த சமயத்திலும் மக்கள் உங்களுக்கு துணையாக இருந்தார்கள். அப்படியிருக்க இந்த நேரத்தில் இப்படிப்பட்ட விஷயங்கள் தேவையா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வீடியோ அப்போது இணையத்தில் வேகமாக பரவியது.
பின்னர் கொடுத்த விளக்கம்
அந்த சர்ச்சை பெரிதானபோது சமுத்திரக்கனி பின்னர் விளக்கம் அளித்தார். "நான் வேண்டுமென்றே பேசவில்லை. அது என் கருத்து மட்டும் அல்ல. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பலரும் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தனர். அதைத்தான் நானும் சொன்னேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்போது மீண்டும் அவர் குடும்பம் பற்றி பேசிய கருத்துகள் வெளியாகியிருப்பது, பழைய சர்ச்சையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
மறைமுக விமர்சனமா?
சமுத்திரக்கனியின் இந்த பேச்சை சிலர் நல்ல எண்ணத்துடன் சொன்ன அறிவுரை என்று பார்க்கிறார்கள். "இளைஞர்களுக்கு குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை சொல்ல வேண்டும் என்பதைத்தான் அவர் கூறியிருக்கிறார்" என்கிறார்கள்.
ஆனால் மற்றொரு தரப்பு, "ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இப்படிப் பொதுவெளியில் பேச வேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது நெட்டிசன்கள் கேட்கும் ஒரே கேள்வி, "சமுத்திரக்கனி அக்கறையோடு பேசினாரா... இல்லை விஜய்க்கு மறைமுகமாக ஒரு மெசேஜ் கொடுத்தாரா?" என்பதுதான்.













Click it and Unblock the Notifications