தங்கையைப் பற்றி தவறாகப் பேசிய நண்பன்.. தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞர்.. கோவையில்
கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே மதுபோதை தலைக்கேறிய நிலையில் தங்கையைப் பற்றி தவறாகப் பேசிய நண்பனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த ஓடக்கல்பாளையத்தில் ஊருக்கு வெளியே உள்ள வனப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரியான மாரப்பன் என்பவரது மகன் பரமசிவம் (28) என்பது தெரியவந்துள்ளது.
பரமசிவம் கோழிப் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், சில மாதங்களாக பணிக்கு சரியாகச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும், இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் தினமும் மது அருந்திக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஓடக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்ற இளைஞரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், பரமசிவம், வரதராஜன் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது பரமசிவம் குடிபோதையில் தனது தங்கையைப் பற்றி மிகவும் தவறாகப் பேசியதால் கல்லால் அடித்துக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சம்பவத்தன்று பரமசிவம் தனது நண்பர்களான பார்த்திபன் மற்றும் வரதராஜன் ஆகியோருடன் மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது, பார்த்திபன் மட்டும் மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார். பரமசிவமும், வரதராஜனும் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் வரதராஜனின் தங்கை குறித்து பரமசிவம் தவறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வரதராஜன் பரமசிவத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த வரதராஜன் அருகில் இருந்த கல்லை எடுத்து பரமசிவத்தின் தலையில் போட்டு தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த பரமசிவம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடனடியாக அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்ற வரதராஜன் வதம்பச்சேரி சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து, வரதராஜனை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications