‘அப்பா.. என்னை கொல்ல போறாங்க..’ - வீடியோ காலில் பதறிய கைதி.. கோவை சிறையில் பரபரப்பு
கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் கடந்த வாரம் ஒரு தண்டனை கைதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் கோவை சிறையில் உள்ள மற்றொரு கைதி, தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ காலில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மத்திய சிறையில் 2,500க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 500க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் இருக்கிறார்கள். காந்திபுரம் பகுதியில் உள்ள சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் சிறை வளாகத்தை காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.

அண்மை காலமாக கோவை மத்திய சிறையை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வெடித்து கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ் என்கிற ஏசுதாஸ், கொலை வழக்கு ஒன்றில் கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார். கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அவர் சிறை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கழுத்து எலும்பு முறிந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்தார் என்றும், கொலை செய்யப்பட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், துணை ஜெயிலர் உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அதே கோவை மத்திய சிறை வளாகத்தில் மீண்டும் மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (வயது 29). இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் கைதாகி கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.
இவர் தன் வழக்கறிஞரிடம் பேசிய வீடியோ கால் வைரலாகி வருகிறது. அதில் விக்ரம், "அப்பா.. சித்தி.. தம்பி.. ராஜா அண்ணா நான் சொல்றது என்னென்னா.. இங்க என்ன நடக்குதுனு தெரியல. என் கூட இருந்தவனை கொன்னுட்டாங்க. அடுத்து நான் தான். எனக்கு என்ன நடந்தாலும் கிருபாகரன், சதீஷ், பாலு, மோகன் ராம் தான் காரணம்.
என்னை எப்ப கொல்லுவாங்க. என்ன செய்வாங்கனு தெரியல. எனக்கு எந்த நொடி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எப்ப என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க. எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு இவங்க தான் காரணம். பார்த்துக்கோங்க." என்றவர் மீண்டும் அதே நபர்களின் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார். "இதை உடனே போட்டு விடு என்றும்." அவர் கூறியுள்ளார்.
"இந்த வீடியோ வழக்கறிஞர் மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டு பிறகு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறை கைதிகள் மாதம் சராசரியாக 120 நிமிடங்கள் வீடியோ கால் பேச அனுமதி உள்ளது. சிறை அதிகாரிகள் இல்லாத நேரத்தில் விக்ரம், தனது வழக்கறிஞரிடம் தவறான தகவல்களை சொல்லி பரப்பியுள்ளார்.
அவருக்கு சிறைக்குள் எந்த பிரச்னையும் இல்லை. தவறான தகவல் பரப்பிய காரணத்தால் விக்ரம் மற்றும் அவரது வழக்கறிஞர் மீது புகாரளித்துள்ளோம்." என்று கோவை மத்திய சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications