அமெரிக்க வரியால் கேள்விக்குறியாகும் கோவையின் தொழில் துறை எதிர்காலம் - கொடிசியா தலைவர் கார்த்திகேயன்
கோவை: டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அதிபராக பதவியேற்றதில் இருந்து பல தடாலடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க வரியை 50 சதவீதமாக உயர்த்தி, தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். தொழில் மையமான கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் கணிசமான உற்பத்தி அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ளன. இந்த நடவடிக்கையால் அங்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிப்பு, வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தனர். இதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, அதற்கு பழிவாங்கும் விதமாக வரி உயர்வு நடவடிக்கையில் இறங்கியது. இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரியை 25 சதவீதம் உயர்த்தினார் டிரம்ப்.

டிரம்ப் வரி உயர்வு நடவடிக்கை
அந்த வரி உயர்வு அமலுக்கு வருவதற்கு முன்பாகவே டிரம்ப் இந்தியா மீது மேலும் 25 சதவீதம் வரியை உயர்வை அறிவித்து அதிர்ச்ச கொடுத்தார்.. இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தொழில் நிறுவனங்களுக்கு இந்த கூடுதல் வரி உயர்வுடன் சேர்த்து 50 சதவீதம் வரி உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.

ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கோவை கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், "டிரம்ப் அறிவித்துள்ள 25% + 25% = 50 சதவீத வரியால் பொறியியல் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் பாதிக்கும். கோவையில் உள்ள பொறியியல் நிறுவனங்கள், அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.4,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்கிறார்கள். எர்த் மூவிங், விண்ட் மில் உதிரி பாகங்கள் பல அமெரிக்காகவே பிரத்யேகமாக செல்கின்றன. மொத்த உற்பத்தியில் 30-40 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு செல்கிறது.
ஸ்டீல் விலை குறையுங்கள்
தற்போது கோவை பொறியியல் நிறுவனங்களின் உற்பத்தி, எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பெரு நிறுவனங்கள் திறன் வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்தி இருப்பார்கள். திடீரென்று உற்பத்தியை குறைவதை அவர்களால் சமாளிக்க முடியாது. இங்குள்ள நிறுவனங்கள் 5-7 சதவீதம் மார்ஜின் வைத்துதான் இயங்கி வருகின்றன. இதுதவிர தங்கம், வைரம் நகைகள், பர்னிச்சர், ஸ்டீல் காஸ்டிங், கனிமவளத்துக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் இங்கிருந்துதான் செல்கின்றன.

அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு இதை ஏற்றுமதி செய்வதும் கடினம். கடந்த சில வருடங்களாக உலக பொருளாதார சூழல்களை கண்காணித்து, இப்போதுதான் தொழில் உயர்வடையும் என்று எதிர்பார்த்து வந்தோம். திடீரென வரி உயர்வை அறிவித்து எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளனர். அரசு ஸ்டீல்களுக்கான இறக்குமதி வரியை 12 சதவீதம் உயர்த்தியுள்ளனர். அதை இந்த நேரத்தில் நீக்க வேண்டும். ஸ்டீல்களுக்கு எம்ஆர்பி நிர்ணயித்து கொடுங்கள் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
விரைவில் சரி செய்யாவிடின்
2021 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வைத்து வருகிறார்கள். கடந்த வருடம் ஸ்டீல் இறக்குமதி வரி 5 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதை நீக்குவதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு சற்று சேமிக்க முடியும். மேலும் இந்த வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து வெளிவர தாமதம் ஆகும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 25 சதவீதம் வர்த்தகம் பாதிக்கப்படும்.
இந்த சந்தை சீனா, தைவான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பயனடைகின்றன. அவர்கள் அமெரிக்க சந்தைக்குள் ஆழமாக கால் வைத்து விட்டால் அங்கு இந்தியா மீண்டும் செல்வது சாத்தியம் இல்லாத விஷயமாகிவிடும். பொருளாதார மந்த நிலை பிரச்சனை பெரிதாக இருக்கும். விரைவில் இரு நாடுகளும் பேசி ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அமெரிக்க சந்தையை நம்பி இங்கு பல ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

வேலை வாய்ப்பு பறிபோகும்
அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, அரசு வங்கிகள் மூலம் உதவி செய்ய வேண்டும். மானியம் வழங்குவதால் குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். காட்டன் உற்பத்தி இறக்குமதிக்கு விதி விலக்களித்துள்ளனர். அதில் 11 சதவீதம் வரை செலவு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அவர்களுக்கு நேரடியாக 50 சதவீதம் வரி உயர்வு பட்டியலில் உள்ளனர். அதனால் 11 சதவீதம் வரி விலக்கு நிச்சயம் போதாது.
காட்டனை வாங்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை. பின்னாலடைக்கு தேவையான யான் கொள்முதல் செய்வதையும் நிறுத்தி வைத்துள்ளனர். கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் பல லட்சம் பேர் ஜவுளி துறையை நம்பியுள்ளனர். இதில் 25 சதவீதம் ஏற்றுமதி சந்தையை நம்பியுள்ளனர். இங்கு லட்சம் பேரின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். அமெரிக்கா வரியால் ஜவுளித்துறையில் ரூ.5,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படும்.
12 மாதங்கள்
கொங்கு மண்டலத்தில் மட்டுமே ரூ.50,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில் சுமார் 30 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அது தற்போது கடுமையாக பாதிக்கப்படும். இதுபோன்ற நிறுவனங்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஆர்டர் வைத்திருப்பார்கள். சில நிறுவனங்கள் வருடக்கணக்கில் ஆர்டர் வைத்திருப்பார்கள். இதற்கான மூலப்பொருள்களை எல்லாம் வாங்கியிருப்பார்கள். இதை திடீரென நிறுத்தினால் பலருக்கு பணம் சென்று சேராது. இது சரியாக குறைந்தபட்சம் 12 மாதங்கள் ஆகும்." என்றார்.












Click it and Unblock the Notifications