ஒரே ஆரவாரம்.. சரசரவென நடந்து வந்த முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக முழக்கம் எழுப்பிய கல்லூரி மாணவிகள்!
கோவை : கோவை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும், அரசு நிகழ்ச்சிகள், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்தார்.
கோவை மாவட்டம் முழுவதும் முதல்வர் வருகையையொட்டி இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்று கிணத்துக்கடவு ஈச்சனாரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு கல்லூரி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை சென்ற முதல்வர்
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தார். முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முத்துசாமி, ராமச்சந்திரன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை வரை திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் வெள்ளத்தில் நீந்தித்தான் முதல்வரின் வாகனம் சென்றது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
இதையடுத்து இன்று காலை முதல்வர் ஸ்டாலின் கிணத்துக்கடவு ஈச்சனாரிக்குச் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் அரசு விழாவில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதோடு, ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

மாணவிகள் உற்சாக வரவேற்பு
இதற்காக அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை கல்லூரி மாணவிகள் உற்சாக ஆரவாரம் செய்து வரவேற்றனர். முதல்வர் ஸ்டாலின் நடந்து வளாகத்திற்குள் வந்தபோது இருபுறமும் திரண்டிருந்த கல்லூரி மாணவிகள் உற்சாக ஆரவாரம் செய்து வரவேற்றனர். முதல்வரின் வருகையை தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர். கல்லூரி மாணவிகளின் ஆரவாரத்தால் உற்சாகமடைந்த முதல்வர் ஸ்டாலின், அவர்களை நோக்கி கையசைத்தார்.

விழா முடிந்ததும்
இந்த நலத்திட்ட விழா முடிந்தபிறகு, விருந்தினர் மாளிகைக்குச் சென்று அங்கிருந்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் பிரமாண்ட விழா நடக்கிறது. நாளை திருப்பூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் தொழிலுக்கு தோள்கொடுப்போம் மாநாட்டில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து மதியம் 1 மணிக்கு கோபிசெட்டிப் பாளையத்துக்கு முதல்வர் புறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள கள்ளிப்பட்டியில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் கட்சி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

மூன்று நாட்கள்
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு ஈரோட்டுக்கு செல்லும் முதல்வர் அன்றிரவு அங்கு தங்குகிறார். 26-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மீண்டும் கோவைக்கு வரும் முதல்வர் அன்று மாலை 5 மணிக்கு, பீளமேடு பிஎஸ்ஜி கல்லூரியின் பவளவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் அன்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications