ரயில் முன்பதிவு படிவத்தில் தமிழை காணவில்லை..உடனே நடவடிக்கை எடுத்த தி.மு.க எம்.பி.. குவியும் பாராட்டு
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள ரயில் நிலையம் தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். ஆனால் இந்த ரயில் நிலையம் கேரள மாநிலம் பாலக்காடு கோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
தற்போது மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி ரயில் நிலையம்
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டபோதிலும், திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் ரயில், மதுரை-கோவை பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை என்றும் இந்த ரயில் நிலையம் கேரள அதிகாரிகள் நிர்வாகத்தின் கீழ் உள்ளதால் தொடர்ந்து புறக்கணிப்படுவதாக அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

விண்ணப்ப படிவத்தில் தமிழ் இல்லை
தற்போது இரண்டு ரயில்கள் இயக்கப்படுவதால் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்வதை பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக முன்பதிவு பயண விண்ணப்ப படிவத்தில் தமிழ் மொழி இல்லாதது கண்டு பயணிகள் திடுக்கிட்டனர். மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே முன்பதிவு பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க எம்.பி கடிதம்
இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர். இதேபோல் பொள்ளாச்சி தி.மு.க எம்.பி சண்முக சுந்தரத்துக்கும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தெற்கு ரயில்வே மேலாளர் ஜான் தாமசுக்கு, சண்முகம் சுந்தரம் எம்.பி கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து ஜான் தாமஸ் உத்தரவின் பேரில், பாலக்காடு கோட்ட வணிக பிரிவு ரெயில்வே அதிகாரிகள் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை தொடர்ந்து வழங்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் வரக்கூடாது என்று ரயில் நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

மீண்டும் தமிழ் வந்தது
இதனை தொடர்ந்து நேற்று முதல் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழில் அச்சடிப்பட்ட முன்பதிவு பயணசீட்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி சண்முக சுந்தரம், ''பொள்ளாச்சி ரயில்நிலையத்தில் முன்பதிவு பயனச்சீட்டில் தமிழ் புறக்கணிக்க பட்டதால் தெற்கு ரயில்வே மேலாளர் ஜான் தாமஸ் அவர்களிடம் நேற்று புகார் அளித்ததன் காராணமாக இன்று முதல் முன்பதிவு சீட்டில் தமிழ் மொழி இடம்பெருகிறது. கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த ஜான் அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுத்த தி.மு.க எம்.பி.க்கு பொள்ளாச்சி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications